மெல்லிய அழுகுரல் சத்தத்தில் தொடங்கி, துப்புரவு ஊழியர்கள் இருவர் நிராகரிக்கப்பட்ட புதிதாகப் பிறந்த குழந்தையைக் காப்பாற்றியதில் முடிந்தது.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று திரு பட்வாரி ஷமீமும் திரு முஸ்தஃபா கமாலும் பிடோக் நார்த் ஸ்திரீட் 3, புளோக் 534ஐச் சுற்றியுள்ள 17 குப்பைக் குழாய்களில் இருந்து குப்பையைச் சேகரிக்க ஒரு ‘பகி’ வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு குப்பைத் தொட்டியிலிருந்து குழந்தை அழும் குரல் கேட்டது.
தாம் தவறாகக் கேட்டுவிட்டதாக நினைத்த 24 வயது பட்வாரி, அது பற்றி 37 வயது முஸ்தஃபாவிடம் கேட்டார். அவர்கள் இருவரும் அந்த அழுகுரல் மின்கலம் உள்ள பொம்மையிலிருந்து வருகிறது என்று நினைத்தனர்.
‘பகி’ வானகத்தை ஓட்டிய பட்வாரி அதை நிறுத்த, முஸ்தஃபா குப்பைத் தொட்டியிலிருந்து வரும் அழுகுரல் எதிலிருந்து வருகிறது என்று சோதித்தார்.
முஸ்தஃபா குப்பைத் தொட்டியின் மேற்பகுதியில் இருந்த செய்தித்தாளை அகற்றியபோது, கீழே ஷெங் ஷியோங் பேரங்காடியின் ஈரமான பிளாஸ்டிக் பையில் ஏதோ ஒன்று அசைந்ததைப் பார்த்து அவர்கள் இருவரும் உறைந்து போயினர்.
“பொதுவாக நாங்கள் பிளாஸ்டிக் பைகளை வீசிவிடுவோம். சில நேரங்களில் அவற்றில் அழுகுரல் எழுப்பும் குழந்தைப் பொம்மைகள் இருக்கும்.
“ஆனால், இம்முறை பிளாஸ்டிக் பைக்குள் இருந்து வந்த பலமான அழுகுரல் எங்களைப் பயப்பட வைத்தது,” என்று பட்வாரி சொன்னார்.
உடனடியாக பட்வாரி, அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்தின் மேலதிகாரியை அழைத்தார். அவர் வந்தவுடன் அவர்கள் பையைத் திறந்தனர். அதனுள் ஆண் குழந்தை ஒன்று ரத்தத்துடன் கூடிய நீரில் இருந்ததை பட்வாரி பார்த்தார்.
அதன் தொப்புள்கொடியின் ஒரு பகுதியும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்தது.
மேலதிகாரி உடனே போலிசை அழைத்தார். பட்வாரி குப்பைத் தொட்டி வைக்கும் கிடங்குக்குச் சென்று, குழந்தையைச் சுற்ற ஒரு சுத்தமான துணியை எடுத்து வந்தார்.
அந்தக் குழந்தையின் பெற்றோர் போலிசால் இன்னும் தேடப்பட்டு வருகின்றனர். குழந்தை இப்போது கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் பராமரிக்கப்படுகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை செய்யும் பட்வாரிக்கு இது புதிய அனுபவம்.
அந்தத் துப்புரவாளர்கள் ஒரு நாளைக்கு அந்தப் பேட்டையில் உள்ள 28 வீவக புளோக்குகளின் குப்பைக் குழாய்களிலிருந்து குப்பைகளை அகற்றுகின்றனர். குப்பைத் தொட்டிகள் வைக்கப்படும் கிடங்கு பூட்டப்படுவதில்லை
“செவ்வாய்க்கிழமை இரவு என்னால் தூங்க முடியவில்லை. நான் அந்தக் குழந்தையைப் பார்க்காமல் குப்பையை நசுக்கும் இயந்திரத்தில் போட்டிருந்தால், அந்தக் குழந்தையும் செத்திருக்கும். அதை நினைத்து நானும் செத்திருப்பேன்.
“குழந்தை நலமாக இருப்பதை அறிந்து நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஓர் உயிரை நான் காப்பாற்றியிருக்கிறேன். முன்பை விட இப்போது என் வேலையை நான் பெரிதும் நேசிக்கிறேன்,” என்றார் பட்வாரி.
“ஒரு தந்தை என்ற முறையில் ஓர் உயிரைக் காப்பாற்றியதில் நான் பெருமையடைகிறேன்,” என்றார் முஸ்தஃபா.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity