புனே: தொடக்க ஆட்டக்காரர்கள் குறித்து யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் கோஹ்லி கேட்டுக்கொண்டுள்ளார்,
புனேயில் நடைபெற்ற 20 ஓவர் ஆட்டத்தில் இலங்கை அணியை எளிதாக வீழ்த்திய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் குறிப்பிடுகையில், “இந்த ஆண்டின் தொடக்கம் எங்களுக்கு நன்றாக அமைந்துள்ளது. சரியான பாதையில் ஆட்டத்தை தொடங்கி இருக்கிறோம். ஓர் ஆட்டத்தில் இலக்கை விரட்டிப்பிடித்தோம். மற்றோர் ஆட்டத்தில் முதலில் பந்தடித்து வெற்றி பெற்றிருக்கிறோம். இரு ஆட்டங்களிலும் அணியின் செயல்பாடு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
“அணியின் மூன்று தொடக்க ஆட்டக்காரர்களும் (ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ஷிகர் தவான்) வலுவான வீரர்கள். அணியின் வெற்றிக்காக அவர்கள் நன்றாக ஆடுவது நல்ல விஷயம். மூவரும் இருப்பதன் மூலம் தொடக்க வரிசைக்கு யாரை பயன்படுத்துவது என்ற வாய்ப்பு கிடைக்கிறது. அவர்தான் சிறந்தவர், இவர்தான் நன்றாக ஆடுகிறார் என்றெல்லாம் தொடக்க ஆட்டக்காரர்களை ஒப்பிட்டுப் பேசுவதை ரசிகர்களும் விமர்சகர்களும் நிறுத்திக்கொள்ள வேண்டும். அணி பலம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். மற்றபடி அணியில் உள்ளவர்களுக்கு எதிராக பேசப்படும் கருத்துகளை நான் ஆதரிக்க மாட்டேன். இது நல்ல அறிகுறியும் அல்ல,” என்றார்.