செம்பவாங் வெந்நீர் ஊற்றுப் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் அங்கு உள்ள வசதிகளைத் தவறாகப் பயன்படுத்தாமல் முறையாக நடந்துகொள்வது பற்றி ஆலோசனை கூறுவதற்காக கூடுதலான ஊழியர்களை தேசிய பூங்காக் கழகம் பணியில் அமர்த்தி இருக்கிறது.
வருகையாளர்களுக்கு நன்னடத்தைப் பற்றிய நெறிமுறைகளை விளக்கும் அறிவிப்புப் பலகைகளும் அங்கு பொருத்தப்பட்டு இருக்கின்றன.
அந்தப் பூங்கா $4.3 மில்லியன் செலவில் விரிவாக்கப்பட்டு புதிய வசதிகளுடன் இம்மாதம் 4ஆம் தேதி திறக்கப்பட்டது. ஆனால் ஒரே மாதத்தில் அங்குள்ள வசதிகளை வருகையாளர்கள் தவறாகப் பயன்படுத்து கிறார்கள் என்பதைக் காட்டும் படங்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் கவலை கொள்ளச் செய்தன. இதனையடுத்து கழகம் புதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
வருகையாளர்கள் வெந்நீர் வழிந்தோடும் படிக்கட்டு குளத்தில் குளிக்கக் கூடாது, நீந்தக் கூடாது, மூழ்கி விளையாடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அப்படிச் செய்தால் அவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படலாம். அதோடு மட்டுமின்றி அசுத்த பிரச்சினைகளும் தலைதூக்கும் என்று கழகம் விளக்கி இருக்கிறது.