பெங்களூரு: கர்நாடக மாநிலம் துமகுரு சார்பதிவாளர் அலுவலகத்தின் மூத்த பதிவாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி பி.ஏ. பட்டீல் விசாரித்தார். மனுதாரர் கே. சதீஷ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தமது வாதங்களை முன் வைத்தார்.
அப்போது நீதிபதி குறுக்கிட்டு கூறுகையில், “சார் பதிவாளர் அலுவலகத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியும். பத்திரங்களைப் பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம், சார் பதிவாளர் ஒரு கப் டீ கேட்கிறார். அப்போது பொதுமக்கள், சர்க்கரை சேர்த்தா எத்தனை ஸ்பூன் சர்க்கரை என்று கேட்கிறார்கள்.
“ஒரு ஸ்பூன் சர்க்கரை என்றால் பத்திரப்பதிவுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும். 2 ஸ்பூன் என்றால் ரூ.20 ஆயிரம். இவ்வாறு சொத்து மதிப்பை அடிப்படையாக வைத்து எவ்வளவு லஞ்சம் என நிர்ணயித்து, அது சமிக்ஞை மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்படுவதாகச் சொல்கிறார்கள்,” என்று நீதிபதி கூறியபோது வழக்கறிஞர்கள் அனைவரும் சிரித்தனர்.