சிங்கப்பூரில் சுகாதாரச் சேவையின் தேவை அதிகரித்துள்ளது. அதனை ஈடுகட்டுவதற்கு அரசாங்க, தனியார் சுகாதாரச் சேவை வழங்கும் மையங்கள் ஒருங்கிணைந்த முறையிலான சேவை யை வழங்குவதற்கு இணைந்து செயல்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் கேட்டுக் கொண்டார். நேற்று முன்தினம் ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற ராஃபிள்ஸ் மருத்துவக் குழுமத்தின் 40வது ஆண்டுவிழா விருந்தில் உரையாற்றிய அமைச்சர் இதனை வலியுறுத்தினார். சிங்கப்பூரில் மூத்தோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. வரும் 2030ஆம் ஆண்டுக்குள் நான்கில் ஒரு சிங்கப்பூரர் 65 வயது அல்லது அவ்வயதைத் தாண்டியவராக இருப்பர். அப்போது அவர்களின் தேவைக்கேற்ப சுகாதாரச் சேவை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை வழங்குவதை அவர் சுட்டிக்காட்டினார்.
2015ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ அவசர வாகனத்தின் மூலம் கொண்டு வரப்படும் நோயாளிகளுக்கு ராஃபிள்ஸ் மருத்துவமனை சிகிச்சை வழங்கி வருகிறது. சுகாதார அமைச்சும் ராபிஃள்ஸ் மருத்துவக் குழுமமும் பங்காளித்துவ முறையில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இதுவரையிலும் 2,400 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. "இங்கு சிகிச்சை பெற்ற அந்த நோயாளிகளிடம் பொது மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் சலுகைக் கட்டணத்தைப் போலவே கட்டணம் வசூலிக்கப் பட்டது. தனியார், பொது மருத்துவமனைகளின் இந்த ஒருங்கிணைப்பால் அவசர சிகிச்சை பெறும் முறையை மேம் பட்டுள்ளது," என்றார் அவர். இந்த விருந்து நிகழ்ச்சியில் தேசிய சிறுநீரக அறநிறுவனத்திற்கு $1 மில்லியனை ராஃபிள்ஸ் மருத்துவக் குழுமம் நன்கொடையாக அளித்தது.