குடும்பத்தில் ஏற்படக்கூடிய வன்முறை பிரச்சினையை எதிர்கொண்டு பாதிக்கப்படுவோருக்குக் கூடுதல் ஆதரவு வழங்க அமைப்புகளுக்கிடையிலான புதிய பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சுன் சூலிங் மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் முகம்மது ஃபைசால் இப்ராஹிம் இருவரின் கூட்டுத் தலைமையில் இப்பணிக்குழு இயங்கும்.
குடும்ப வன்முறை குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க இப் பணிக்குழு பல்வேறு திட்டங்களை நடப்புக்குக் கொண்டு வரும்.
நாட்டில் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவதுடன் தனிநபர் பாதுகாப்பு ஆணைக்காக சமர்ப்பித்த விண்ணப்பங்களிலும் குடும்ப வன்முறை ஒரு காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.
“அரசாங்க அமைப்புகளுக்கு இடையேயும் நம் சமூக பங்காளி களுடனும் ஒன்றிணைந்து உதவி வழங்குவது முக்கியம்,” என்றார் திருவாட்டி சுன்.
இதற்காக ‘பேவ்’ அமைப்பு, போலிஸ் மட்டுமின்றி போலிஸ் பிரிவுகளில் இருந்து இயங்கவுள்ள சமூகச் சேவையாளர்களும் கைகொடுக்கவுள்ளனர்.
அத்துடன் வன்முறையால் பாதிக்கப்படுபவர்களுக்கென ஒரு தனி தொடர்பு எண்ணை உருவாக்கும் திட்டத்தைப் பற்றியும் பணிக்குழு ஆலோசித்து வருகிறது. இதன்மூலம் விரைவில் உதவி நாடவும் வழங்கவும் முடியும் என்றார் திருவாட்டி சுன்.