பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் அஸ்மின் அலி தலைமையிலான 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரிபூமி பெர்சாத்து மலேசியக் கட்சியில் இணையப் போவதாக தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
26 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பெர்சாத்து கட்சியை விரிவுபடுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
“பிரதமர் மகாதீர் முகம்மதின் கட்சியில் 26 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இந்த 11 பேரும் அதில் சேருவதன் மூலம் எண்ணிக்கை 37ஆக உயரும். தேசிய முன்னணிக் கட்சியில் உள்ள 41 உறுப்பினர்களைவிட பெர்சாத்து கட்சியில் நால்வர் மட்டுமே குறைவாக இருப்பார்கள்,” என்று அத்தகவல் கூறுகிறது.
“டாக்டர் மகாதீருக்கு ஆதரவளிக்க சிறிய குழுக்களை அமைப்பதற்குப் பதிலாக பெரிய கட்சிகளில் சேருவதன் மூலம் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே, பெர்சாத்து கட்சியில் அந்த 11 பேரும் சேர முடிவெடுக்கப்பட்டுள்ளது,” என்று அத்தகவல் மேலும் குறிப்பிட்டது.
அஸ்மின் அலி, ஸுரைடா கமாருதீன், சைஃபுதீன் அப்துல்லா, பாரு பியான், கமாருதீன் ஜாஃபர், மன்சூர் ஓத்மான், ரஷீத் ஹஸ்னூன், சந்திரகுமார், அலி பிஜூ, வில்லி மோங்கின், ஜானத்தன் யாசின் ஆகியோர் அந்த 11 பேர்.
அவர்களில் நால்வர் முன்னாள் முழு அமைச்சர்கள். அந்த 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிகேஆர் கட்சியில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்கள். அஸ்மின் அலியின் கொள்கைகளுக்கு ஒத்துப் போகக்கூடியவர்களான அவர்கள், கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக செயல்படுபவர்கள்.
இதற்கிடையே, டாக்டர் மகாதீரைப் பிரதமராக ஆதரிக்க பெர்சாத்து கட்சியின் 26 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தகவல் தொடர்புத் தலைவர் ராட்சி ஜிடின் தெரிவித்துள்ளார்.
“பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று (நேற்று) காலை மாமன்னரைச் சந்தித்து டாக்டர் மகாதீர் பிரதமராக தொடருவதற்குத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.
“தற்போதைய அரசியல் சூழ்நிலையைச் சமாளிக்க கட்சித் தலைமைமைத்துவத்தை நம்பவும் அமைதியாக இருக்கும்படியும் பெர்சாத்து உறுப்பினர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
“இந்த விவகாரம் விரைவில் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
இந்நிலையில், ஜோகூர் மாநிலத்தின் 56 சட்டமன்ற உறுப்பினர்களையும் ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் நேற்றிரவு சந்திக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. மாநிலத்தின் அரசியல் நிலவரங்களைக் கண்டறிய அவர் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது.