புத்ரா ஜெயா: மலேசியாவில் அரசியல் நெருக்கடிகளுக்கு இடையே பொருளியலை மேம்படுத்தும் 20 பில்லியன் ரிங்கிட் (S$6.6 பில்லியன்) மதிப்புள்ள சலுகைகளை இடைக்காலப் பிரதமரான டாக்டர் மகாதீர் முகம்மது அறிவித்துள்ளார்.
அரசியல் நிச்சயமற்ற சூழ்நிலை மற்றும் கொரோனா கிருமி பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளியலை மேம்படுத்தும் நோக்கத்தோடு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
“கிருமி பரவலால் பாதிக்கப்பட்டுள்ள பொருளியலை மேம்படுத்தவும் வளர்ச்சியை பெருக்கவும் தரமான முதலீடுகளை ஈர்க்கவும் அறிவிக்கப்பட்டுள்ள தொகுப்பு உதவும்,” என்று டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார்.
“கொவிட்-19 என பெயரிடப் பட்டுள்ள கொரோனா கிருமி பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, கிருமியால் பாதிக்கப்பட்டவர்களும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இருந்தாலும் அந்த கிருமி உலக அளவிலும் மலேசியாவிலும் பொருளியலில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாதிப்புகளை வலுவாகச் சமாளிக்கும் நோக்கத்தோடு பொருளியல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
“மூன்று அணுகுமுறையில் திட்டங்கள் அமலாக்கப்படும். முதலில் பாதிக்கப்பட்ட நிறுவனங்களிடையே ரொக்கப் புழக்கத்தை அதிகரிக்கச் செய்வது, 2வது பாதிக்கப்பட்ட தனிப்பட்டவர்களுக்கு உதவுவது, 3வது சுற்றுலாத் துறையின் தேைவயை அதிகரிக்கச் செய்வது,” என்று பிரதமர் மகாதீர் சொன்னார்.
ஹோட்டல்கள், பயண முகவர்கள், விமான நிறுவனங்கள், கடைத் தொகுதிகள், மாநாட்டு மற்றும் கண்காட்சி நிலையங்கள் ஆகியவற்றுக்கு ஆறு மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தில் 15 விழுக்காடு கழிவு, ஹோட்டல்களுக்கு குறிப்பிட்ட காலம் வரை சேவை வரியிலிருந்து விலக்கு உட்பட பல்வேறு சலுகைகள் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. கிருமியால் வருமானம் பாதிக்கப்பட்ட டாக்சி ஓட்டுநர், சுற்றுலா பேருந்து ஓட்டுநர், சுற்றுலா வழிகாட்டிகள் போன்ற தனிப்பட்டவர் களுக்கு தலா 600 ரிங்கிட் ரொக்கம் வழங்கப்படும். கிருமிக்கு எதிராக போராடும் முதல் நிலையில் உள்ள மருத்துவர்கள், ஊழியர்களுக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.