சென்னை: தமிழ்நாட்டில் மதுபானப் புழக்கம் தொடர்பில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேட்ட கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்க முடியாமல் தமிழக அரசு விழி பிதுங்கியதால் நீதிபதிகள் அரசுக்குக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்தனர்.
தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளில் திருத்தம் கொண்டு வருவது பற்றி ஆறு வாரங்களுக்குள் பரிசீலித்து அறிக்கையைத் தாக்கல் செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.
டாஸ்மாக் மதுபானக் கடைதேவையில்லை என்று ஒரு கிராமம் நிறைவேற்றிய தீர்மானத்தை அரசு கிடப்பில் போட்டுவிட்டது.
இந்த நிலையில், டாஸ்மாக் கடை இடமாற்றம் தொடர்பான ஒரு வழக்கு உயர் நீதிமன்ற விசாரணைக்கு வந்தது.
அரசாங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் விஜயநாராயணன் முன்னிலையாகி, கடந்த பல ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகள் 35 விழுக்காடு குறைக்கப்பட்டதாகவும் அவை திறந்து இருக்கும் நேரமும் 10 மணி நேரமாகக் குறைக்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்தார்.
கிராம சபைக் கூட்டங்களின் தீர்மானங்களைச் சட்டவிதிகளுக்கு உட்பட்டே பரிசீலிக்க முடியும் என்றும் அவர் வாதிட்டார்.
இதைக் கேட்டு கோபமடைந்த நீதிபதிகள், மதுபான கடைகளைக் குறைத்தும் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்று அரசு கூறமுடியுமா என்று கேட்டனர். ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்தப்போவதாகக் கூறும் கட்சிகள், ஆட்சியைப் பிடித்ததும் அந்தக் கோட்பாட்டைக் கைவிடுவது ஏன் என்று அவர்கள் கேட்டபோது அரசு வழக்கறிஞர் பதில் அளிக்கவில்லை.
கோயில்களுக்கு அருகே அசைவ உணவுக் கடைகள் நடத்தக் கூடாது என்று அறிவித்து உள்ள தமிழக அரசு, மதுபானக் கடைகளை வைக்கக் கூடாது என்று ஏன் அறிவிக்கவில்லை என்றும் நீதிபதிகள் கேட்டனர்.
மதுபானக் கடைகளை அமைப்பதற்கு முன் அந்தப் பகுதி மக்களிடம் கருத்துக் கேட்கவேண்டும் என்பதை ஏன் சட்டமாக்கக்கூடாது என்றும் நீதிபதிகள் விளாசினர்.
டாஸ்மாக் கடைகள் அமைப்பதற்கான நடைமுறைகள் பற்றிய அதன் சுற்றறிக்கையை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் காட்டமாக அறிவித்துவிட்டனர்.