கொவிட்-19: பள்ளிகள் மூடல்; 290 மில்லியன் மாணவர்கள் பாதிப்பு
உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட 300 மில்லியன் மாணவர்கள் இன்று (மார்ச் 5) இன்று பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த நாடுகளின் பட்டியலில் இப்போது இத்தாலியும் இணைந்துள்ளது.
அனைத்துலக அளவில் 95,000க்கும் மேற்பட்டோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் சீனாவின் ஹுபெய் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.
உலகின் 80 நாடுகள், பிரதேசங்களை எட்டியுள்ளது கொரோனா கிருமி. அதன் பிடியிலிருந்து விடுபட பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. 13 நாடுகள் பள்ளிகளை மூடியுள்ளதாக நேற்று (மார்ச் 4) யுனெஸ்கோ தெரிவித்தது. ஒன்பது நாடுகளில் சில பள்ளிகள் உள்ளூர் வசதிப்படி மூடப்பட்டுள்ளன.
இதன் மூலம் சுமார் 290.5 மில்லியன் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நெருக்கடி காலங்களில் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்படுவது புதிதல்ல என்றாலும் “தற்போது கல்விக்கு ஏற்பட்டிருக்கும் இடையூறு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகம்,” என்று குறிப்பிட்ட யுனெஸ்கோ தலைவர் ஆட்ரே அஸௌலே, “இது நீடித்தால், கல்வி உரிமைக்கே அது அச்சுறுத்தலாக அமையக்கூடும்,” என்று கூறியுள்ளார்.
இம்மாதம் 15ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகளை மூடுவதாக இத்தாலி நேற்று அறிவித்தது. அங்கு கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆகியுள்ள நிலையில் சீனாவுக்கு வெளியில் கிருமித்தொற்றால் ஆக அதிகமாக உயிரிழப்புகளைக் கொண்ட நாடாக இப்போது இத்தாலி இருக்கிறது.
கிட்டத்தட்ட 6,000 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தென்கொரியாவில் புதிய தவணைக்காக பள்ளிகள் திறக்கப்படுவது இம்மாதம் 23ஆம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் அடுத்த மாதத் தொடக்கம் வரை பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
பிரான்சில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுமார் 120 பள்ளிகள் இந்த வாரம் மூடப்பட்டுள்ளன.
#கொரோனா #பள்ளிகள் மூடல் #மாணவர்கள் பாதிப்பு #தமிழ்முரசு