தலைமைத் தணிக்கையாளர் அலுவலகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த இரு விவகாரங்களுக்குத் தற்காப்பு அமைச்சு விளக்க மளித்துள்ளது. ஆண்டு முழுவதும் மேற்கொள்ளப்படும் உள் தணிக்கைகளுக்குத் துணை யாகத் தலைமைச் சட்ட அதிகாரியின் அலுவலகம் நடத்தும் வருடாந்தர வெளி தணிக்கையைத் தற்காப்பு அமைச்சு வரவேற்றது. தற்காப்பு அமைச்சு அதன் நடைமுறைகளை மறுஆய்வு செய்யவும் அடையாளம் காணப்பட்ட பிழைகளுக்கு விளக்கமளிக்கவும் குறைபாடுகளைச் சரிசெய்து சீரிய ஆளுமையை உறுதிப்படுத்தவும் பொது நிதி, வளங்கள் ஆகியவற்றின் நிர்வாகத்தில் முறையான இடர் கட்டுப்பாடுகளையும் வெளிப் படையான பொறுப்பேற்பையும் நிலைநாட்டவும் தலைமைத் தணிக்கையாளர் அலுவலகத்தின் தணிக்கைகள் தற்காப்பு அமைச்சுக்கு வழிகோலுவதாகக் கூறி னார் தற்காப்பு அமைச்சின் துணைச் செயலாளர் (நிர்வாகம்) ஹான் நெங் சியூ.
முதலாவதாக, சேமிப்பு, ஊழியர் ஓய்வுக்காலம், பிரிமியம் (சேவர்=பிரிமியம்) நிதித் திட்டத்தின்கீழான $50.26 மில்லியன் முதலீட்டுக்கு 'சேவர்=பிரிமியம்' நிதியின் அறங்காவலர் மன்றத்தி லிருந்து திட்டவட்டமான அங்கீகாரம் பெறப்படவில்லை என்று தலைமைத் தணிக்கையாளர் அலுவலகம் கண்டுபிடித்தது.
இலக்கு உத்தியாக நிலச்சொத்து முதலீட்டு டிரஸ்டுகளில் (ஆர்இஐடி) முதலீடு செய்வதற்கு அறங்காவலர் மன்றம் ஏற் கெனவே அங்கீகாரம் அளித்திருந்ததாகவும் மேற்குறிப்பிட்ட முதலீட்டைச் செய்வதற்கு இந்த அங்கீகாரம் போதுமானதென முதலீட்டுப் பிரிவு கருதியதாகவும் தற்காப்பு அமைச்சு ஏற்கெனவே தலைமைத் தணிக்கையாளர் அலுவலகத் திடம் விளக்கம் அளித்தது. ஆயினும், குறிப்பிடப்பட்ட 'ஆர்இஐடி' பங்குச்சந்தை நிதியில் முதலீடு செய்வதற்கும் பரிவர்த்தனையைக் கையாளுவதற்கு முதலீட்டு நிர்வாகியை நியமிப்பதற்கும் அறங்காவலர் மன்றம் திட்டவட்டமான அங்கீகாரம் அளிக்கவேண்டும் என்று தலை மைத் தணிக்கையாளர் அலுவலகம் கருதியது.
அதனைத் தொடர்ந்து, முதலீட்டு நிர்வாகியை நியமிக்க அறங்காவலர் மன்றத்தின் அங்கீகாரத்தைத் தற்காப்பு அமைச்சு பெற்றுவிட்டது. அறங்காவலர் மன்றத்தின் நடப்புக் கட்டளைகளை தேவை ஏற்படும்போது தற்காப்பு அமைச்சு மறுஆய்வு செய்து சீரமைக்கும். இரண்டாவதாக, சிங்கப்பூர் ஆயுதப்படை ஊழியர்களுக்கான முழு சேமிப்புக் கூட்டு ஊக்கத் தொகைக்கு (எஃப்எஸ்விபி) தற்காப்பு அமைச்சு மத்திய சேமநிதி சந்தா செலுத்தவில்லை என்று தலைமைத் தணிக்கையாளர் அலுவலகம் சுட்டிக் காட்டியது. 'சேவர்' ஓய்வுகாலத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே 'எஃப்எஸ்விபி' ஊக்கத்தொகைத் திட்டம் தொடங்கப்பட்டு, அதுபற்றி ஊழியர்களிடம் தெரியப்படுத்தப்பட்டதாகத் தற்காப்பு அமைச்சு விளக்க மளித்தது. குறைந்தபட்ச சேவை காலத்திற்குப் பிறகு வழங்கும் வகையில் 'எஃப்எஸ்விபி' ஊக்கத் தொகைத் திட்டத்தைத் தற்காப்பு அமைச்சு வடிவமைத்திருந்தது.
தேவையான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்யாத வர்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்காது. ஆனால், தலைமைத் தணிக்கையாளர் அலுவலகத்தின் கண்ணோட்டத்தில், வேலை செய்யும் தொழிலாளர்களுக்குச் செலுத்தப்படும் எல்லாவகை ஊக்கத்தொகைகளுக்கும் மத்திய சேமநிதி சந்தா செலுத்துவது கட்டாயமாகக் கருதப்படுகிறது. இந்த ஊக்கத்தொகைத் திட்டத்தை ஓய்வுகாலம் வரை நீட்டிக்கலாமா எனத் தற்காப்பு அமைச்சு உள் பரிசீலனை செய்தது. ஆனால், ஊழியர்களைத் தக்க வைக்க இத்திட்டம் உதவியதால் திட்டத்தை நிலைநாட்ட அமைச்சுத் தீர்மானித்தது. எனவே, ஏற்கெனவே செலுத்தப்பட்ட 'எஃப்எஸ்விபி' ஊக்கத் தொகைக்கு உரிய மத்திய சேமநிதி சந்தாவை அமைச்சு செலுத்தும். தலைமைத் தணிக்கையாளர் அலுவலகம் எழுப்பிய விவகாரங்களுக்குத் தற்காப்பு அமைச்சு தீர்வு கண்டுவிட்டதாகக் கூறிய துடன் நிறுவன ஆளுமை யிலும் பொதுமக்களிடம் பொறுப் பேற்பதிலும் உயர் தரங்களை அடைவதில் கடப்பாடு கொண்டிருப்பதாக அமைச்சு வலியுறுத் தியது.