மின்னிலக்க உலகை இயக்கும் ‘எரிபொருளாக’ திகழும் தரவு (data) வருங்காலத்தில் அனைவருக்கும் மலிவாகக் கிடைக்கப்பெற்று பயனளிக்கவேண்டும் என்பது பைபிராஸ்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான 27 வயது அரவிந்த் கந்தையாவின் நோக்கம். மெய்நிகர் தரவுகளை உருவாக்கும் இவரது நிறுவனம், கடந்தாண்டுதான் தொடங்கிய போதும் எஸ்எம்ஆர்டி உள்ளிட்ட வாடிக்கையாளர்களை ஈர்த்திருக்கிறது.
தரவு, உலகின் மிக விலை உயர்ந்த பொருட்களில் ஒன்றாக உள்ளது. தானியக்க வாகனங்கள், இயந்திர மனிதர்கள் என உலகில் தற்போது உருவெடுத்து வரும் அதிநவீன மாற்றங்கள் தரவுகளைச் சார்ந்திருக்கின்றன. இருந்தபோதும் தரவுக்கான தட்டுப்பாடு, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வளர்சசிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக அரவிந்த் கூறினார்.
“செயற்கை நுண்ணறிவை உருவாக்குவதற்கு படிமுறையும் (algorithm) தரவும் தேவைப்படுகின்றன. படிமுறைகள் (algorithms) கணினியியல் நிபுணர்களால் உருவாக்கப்படுபவை என்பதால் அவை எளிதில் கிடைக்கக்கூடியவை. தரவுகளைத் திரட்டுவதுதான் சவால். நிஜ உலகிலிருந்து தரவுகளைப் பெருமளவில் திரட்டுவதற்கு அதிக காலமும் பணச்செலவும் ஆகிறது.
“அதனால்தான் பெரும் அளவிலான தரவுகள் ஒரு சில தொழில்நுட்பப் பெருநிறுவனங்களின் கைவசம் உள்ளன. இந்நிலை மாறி, அனைவருமே இதனைப் பயன்படுத்தி புத்தாக்க சிந்தனையுடன் செயல்பட வேண்டும். தரவுப் பயன்பாட்டை ஜனநாயகமயப்படுத்தலே எங்கள் இலக்கு,” என்று அரவிந்த் கூறினார்.
சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தில் (எஸ்யுடிடி) தகவல் கட்டமைப்பு, வடிவமைப்பு பயின்ற அரவிந்த், தமது இறுதியாண்டு வகுப்புத் திட்டப்பணியின் சக உறுப்பினர் ஒருவருடன் இணைந்து பைபிராஸட் நிறுவனத்தைத் தொடங்கினார். அந்தத் திட்டப்பணியில் அரவிந்தும் அவரது குழுவினரும் பணிமனையில் பொட்டலமிடும் இயந்திர மனிதனை உருவாக்கினர்.
“கீழே கிடக்கும் ஒரு பொருளைப் பொறுக்கி எடுக்க ஓர் இயந்திர மனிதருக்கு எப்படி உரிய திறனை அளிப்பது? தரவுகளைக் கொண்டுதான் அதனைச் செய்யவேண்டும். ஆனால் நிஜ உலகிலிருந்து ஆயிரக்கணக்கான தரவுப் படங்களைச் சேகரிக்க குறைந்தது ஓராண்டு ஆகும். இதற்குப் பலரை வேலைக்கு எடுக்கவும் வேண்டி உள்ளது. எனவே இவற்றை விடுத்து மெய்நிகர் தொழில்நுட்பம் வழியாகத் தரவுகளை உருவாக்கி எங்களது பணியைத் துரிதப்படுத்தினோம்,” என்று அரவிந்த் கூறினார்.
நிஜ உலகத்தின் ‘பிரதிகளாக’ இருக்கும் மெய்நிகர் உலகங்களிலிருந்து திரட்டப்படும் தரவுகள், நிஜ உலகத் தரவுகளுக்கு ஈடானவை எனத் தெரிவித்த அரவிந்த், மெய்நிகர் தரவின் பயன்பாடு மிகவும் புதியது எனக் கூறினார். “அமெரிக்காவில் ஒரு சில ஆய்வுக் கழகங்களில்தான் இதுகுறித்து பேசப்பட்டு வந்தது,” என அவர் கூறினார்.
இந்தத் திட்டத்திற்கு இவர்கள் பயன்படுத்திய செயற்கை நுண்ணறிவு மென்பொருள், வேறு பல புத்தாக்கங்களுக்குப் பயன்படும் என்பதை அறிந்தார் அரவிந்த். திட்டப்பணி நிறைவடையும் தறுவாயில் நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க தாமும் தமது நண்பர் 26 வயது சார்ல்ஸ் வோங்கும் முடிவு செய்தனர். தங்களது மென்பொருளுக்கு ‘பைபிராஸ்ட்’ என பெயரிட்டு இவர்கள் அதே பெயரை தங்களது நிறுவனத்திற்கும் வைத்தனர்.
2017ல் ஜெர்மனியில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மாநாட்டில் தமது புத்தாக்க வடிவங்களைப் படைத்த அரவிந்த, கடந்த சுமார் நான்கு ஆண்டுகளாக குறைந்தது பதினைந்து விருதுகளை அள்ளிக்குவித்துள்ளார்.
அத்துடன், சொந்த நிறுவனம் ஆரம்பிக்க ஆசைப்பட்டதாகக் கூறும் அரவிந்த், தொழில்நுட்பத்திறனை ஆழப்படுத்தியதுடன் வர்த்தகம் தொடங்குவது பற்றி பல ஆண்டுகளாகப் படித்து வந்தார். எஸ்யுடிடியின் தொழில்தொடங்கு வோருக்கான வர்த்தக நிலையம் (Entre preneurship centre) வழங்கிய வாய்ப்புகளையும் வளங்களையும் அரவிந்த் கெட்டிக்காரத்தனமாகப் பயன்படுத்திக்கொண்டார்.
தற்போது எஸ்எம்ஆர்டி ரயில் கட்டமைப்புக்கான பராமரிப்பு, விமானங்களின் பழுதுபார்ப்பு உள்ளிட்டவற்றுடன் தொடர்புடைய சில திட்டங்களில் இவரது நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.