தோக்கியோ: கொரோனா கிருமித்தொற்று காரணமாக ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தள்ளிப்போடப்பட்டுள்ள நிலையில், அனைத்துலக ஒலிம்பிக் குழுவுக்கு அளித்துவரும் ஆதரவு தொடரும் என முக்கிய விளம்பர நிறுவனங்கள் உறுதி கூறியுள்ளன.
இது குறித்து கருத்துரைக்கும் நிபுணர்கள் இந்த விளையாட்டு போட்டிகளுக்காக விளம்பர நிறுவனங்கள் வழங்கியுள்ள பில்லியன் கணக்கான தொகையை அந்நிறுவனங்கள் திருப்பிக் கேட்கும் சாத்தியமில்லை என்று கூறுகின்றனர்.
ஒலிம்பிக் போட்டிகளுக்காக கொக்கோ கோலா, புராக்டர் அண்ட் கேம்பல், இன்ெடல் கார்ப் போன்ற 14 நிறுவனங்கள் ஏற்கெனவே அமெரிக்க டாலர் 500 மில்லியனை இவ்வாண்டு செலவழித்துள்ளதாகவும் இவை மேலும் 14 பில்லியன் டாலர்பெறுமானமுள்ள ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் குளோபல் டேட்டா என்ற ஆய்வு நிறுவனம் கூறுகிறது.
உலகில் வேகமாக பரவிவரும் கொரோனா கொள்ளை நோயால் இவ்வாண்டு நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திப் போட்டுள்ளதாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று அறிவிக்கப்பட்டது.
இது இந்தப் போட்டி விளையாட்டுகள் நடைபெற்று வந்துள்ள 124 ஆண்டுகளில் முதன்முதலாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பு வெளியான பின்னர் புரோக்டர் அண்ட் கேம்பல், இன்டெல், கொக்கோ கோலா, ஏர்பிஎன்பி போன்ற நிறுவனங்கள் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தங்கள் கடப்பாட்டை மறுஉறுதிசெய்துள்ளன.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தள்ளிப்போடப்பட்ட பிரச்சினையில் தாங்கள் ஆக்ககரமான தீர்வுகளைக் காண்போம் என்று பிரிட்ஜ்ஸ்டோன் நிறுவனம் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் கூறுகிறது.
“ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு நீண்டகாலமாக ஆதரவளித்து வந்துள்ள எங்கள் நிறுவனம் இந்தப் பிரச்சினையில் அனைத்துலக ஒலிம்பிக் குழுவுடனும் தோக்கியோ ஏற்பாட்டுக் குழுவுடனும் இணைந்து பணியாற்றி இந்தப் போட்டிகளை வெற்றிகரமாகவும் பாதுகாப்பாகவும் நடத்த கடப்பாடு கொண்டுள்ளது,” என்று கொக்கோ கோலா நிறுவனப் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்தப் பிரச்சினை விளம்பர ஆதரவு நிறுவனங்களுக்கு பெரிய நிதிச் சுமையை ஏற்படுத்தினாலும் இந்நிறுவனங்கள் தங்களை அனைத்துலக ஒலிம்பிக் குழுவின் நீண்டகால பங்காளிகளாகக் கருதுவதாக ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் தெரிவிக்கிறது.