ரியோ டி ஜெனிரோ: உலகின் மிகச் சிறந்த காற்பந்து வீரராக கிறிஸ்டியோனா ரொனால்டோ (படம்) திகழ்கிறார் என்று பிரேசில் காற்பந்து சகாப்தம் பெலே கூறியிருக்கிறார்.
அர்ஜெண்டினா அணித்தலைவர் லயனல் மெஸ்ஸியைக் காட்டிலும் போர்ச்சுகல் அணித்தலைவரான ரொனால்டோ திறமையான ஆட்டக்காரர் என்பது 79 வயதான பெலேவின் கருத்து.
“இப்போதைக்கு, ரொனால்டோவே உலகின் மிகச் சிறந்த காற்பந்து ஆட்டக்காரர். ஏனெனில், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அவர் சிறப்பாக ஆடி வருகிறார். அதே நேரத்தில், மெஸ்ஸியையும் மறந்துவிடக்கூடாது,” என்று ‘பிலாடோ’ எனும் யூடியூப் ஒளிவழிக்கு அளித்த நேர்காணலின்போது பெலே குறிப்பிட்டார்.
ஆயினும், சான்டோஸ், நியூயார்க் காஸ்மோஸ், பிரேசில் குழுக்களுக்காகப் பல வெற்றிகளைத் தேடித் தந்த தமது ஆட்டத்தைப் போல அவ்விருவரின் ஆட்டமும் இல்லை என்றும் பெலே சொன்னார்.
பிரேசிலின் ஸிக்கோ, ரொனால்டினியோ, ரொனால்டோ நஸரியோ, ஜெர்மனியின் பிரான்ஸ் பெக்கன்போவர், நெதர்லாந்தின் யோகன் கிரைஃப் ஆகிய முன்னாள் ஆட்டக்காரர்களை தமக்குப் பிடித்தமானவர்களாக அவர் பட்டியலிட்டார்.
தமது பரம எதிரியான அர்ஜெண்டினாவின் டியேகோ மரடோனாவுக்குத் தமது பட்டியலில் பெலே இடமளிக்கவில்லை.
“காற்பந்தில் ஒரே ஒரு ராஜாதான். எல்லாரையும்விட பெலேதான் சிறந்த ஆட்டக்காரர்,” என்று அவர் பெருமிதம் கொண்டார்.
மூன்று முறை உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய ஒரே ஆட்டக்காரரான பெலே, தமது 22 ஆண்டுகால தொழில்முறை காற்பந்து வாழ்க்கையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார்.