சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234ஆக அதிகரித்துள்ளது. இவர்களுள் 190 பேர் அண்மையில் டெல்லியில் நடைபெற்ற சமய மாநாட்டில் பங்கேற்றவர்கள் என மாநில சுகாதாரத் துறைச் செயலர் ஷீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த மாதம் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற்ற சமய மாநாட்டில் தமிழகத்தில் இருந்து 1,131 பேர் கலந்து கொண்டதாகக் குறிப்பிட்டார்.
இவர்களில் 80 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது இரு தினங்களுக்கு முன் தெரியவந்தது. இதையடுத்து மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள சுகாதார அமைச்சு முடிவு செய்தது.
எனினும் மாநாட்டில் பங்கேற்றவர்களில் 515 பேரை மட்டுமே அடையாளம் காணமுடிந்தது. இந்நிலையில் அரசின் கோரிக்கையை ஏற்று சிலர் தாமாகவே முன்வந்து மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனர். அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக ஷீலா ராஜேஷ் தெரிவித்தார்.
தமிழகத்தில் தற்போது 77,330 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளதாகவும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் 28 நாட்கள் வீட்டுக் கண்காணிப்பை முடித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைக்காக 11 அரசு ஆய்வு மையங்கள் மற்றும் 6 தனியார் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மேலும் ஆறு நோய்த்தொற்று பரிசோதனை மையங்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.