சென்னை: தமிழகத்தில் 234 பேரை பீடித்துள்ள கொரோனா கிருமித் தொற்று இன்னும் தீவிரமடையலாம் என்ற அச்சம் உருவாகியுள்ள நிலையில், இதை மேலும் பரவ விடாமல் கட்டுக்குள் வைக்க தமிழக அரசின் 825 புதிய கட்டடங்கள் தயார் நிலையில் உள்ளன.
கொரோனா தனிமைப்படுத்தும் வார்டுகளாக இந்தக் கட்டடங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தமிழகத்தின் 38 மாவட்டங்க ளில் செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களைத் தவிர, மற்ற 35 மாவட்டங்களிலும் 825 புதிய கட்டடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
கொரோனா கிருமிப் பரவலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், இந்தக் கட்டடங்களில் 51,000 படுக்கை வசதிகளை அமைக்க உள்ளனர்.
உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா கிருமி பாதிப்பால் நேற்று மாலை நேரத்துடன் 47,000க்கும் மேலானோர் உயிரிழந்தனர். இந்த பாதிப்பு தமிழகத்தையும் விட்டுவைக்காமல் 234 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாவட்டத்தில் 7 கட்டடங்களில் 3,702 படுக்கைகளும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 கட்டடங்களில் 66 படுக்கைகளும் திருவள்ளூர் மாவட்டத்தில் 5 கட்ட டங்களில் 480 படுக்கைகளும் அமைக்கப்பட உள்ளன.
ஆகமொத்தத்தில் தமிழகத்தின் 35 மாவட்டங்களில் 825 புதிய கட்டடங்களில் 14 லட்சத்து 6 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் 51,000 படுக்கை வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்த உள்ளது.
இதற்கிடையே கதர் மற்றும் தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், சட்டமன்ற உறுப்பினர் நெட்டூர் நாகராஜன் உள்ளிட்டோர் மானாமதுரை, திருப்புவனம் அரசு மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தி இலவசமாக முகக் கவசங்களை வழங்கினர். ஆனால் ஆய்வின்போது அமைச்சர்களும் அதிகாரிகளும் சமூக இடை வெளியைப் பின்பற்றாமல் கூட்டமாக வந்ததாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதையடுத்து சமூக இடைவெளி யில் மறவாமல் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.