'சிங்கப்பூர்-தமிழகக் காதல்' என்ற செய்திக் கட்டுரைக்காக தமிழ் முரசின் செய்தியாளர் எஸ். வெங்கடேஷ்வரன் கடந்த ஆண்டுக்கான ‘செய்தித்துறையில் உன்னதம்‘ விருதைத் தட்டிச் சென்றார். சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ஆங்கிலம், மலாய், தமிழ் ஊடகங்களில் கடந்த ஆண்டில் வெளிவந்த செய்திகளுக்கான இந்த விருது, மற்ற பல விருதுகளுடன் இன்று பிற்பகல் வழங்கப்பட்டது.
சிங்கப்பூரைச் சேர்ந்த ரேணுகா, ஜெயந்தி, கௌரி ஆகிய மூன்று சகோதரிகளுக்கும் இந்தியாவைச் சேர்ந்த மூன்று சகோதரர்களுக்கும் இடையே மலர்ந்த காதலையும் கனிந்த திருமண பந்தத்தையும் பற்றி விவரவித்தது அந்தக் கட்டுரை. ஜனவரி 18ஆம் தேதி 'தப்லா' இதழில் முதல் முதலாக ஆங்கிலத்தில் பொங்கலுக்காகச் சிறப்பாக வெளியிடப்பட்ட இக்கட்டுரை பின்னர் தமிழ் முரசு 20ஆம் தேதியன்று அச்சுப்பிரதியிலும் இணையத்திலும் வெளிவந்தது. அத்துடன், உலக செய்தி ஆசிரியர் கருத்தரங்கின் 'வர்ல்ட்நியூஸ்டே.ஆர்க்' என்ற இணையத்தளத்திலும் இந்தச் செய்திக் கட்டுரை வெளிவந்தது. மேலும், இச்செய்தி பல்வேறு இந்திய மற்றும் சீன ஊடகங்களிலும் மறுவடிவம் கண்டு பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்தச் செய்தியை ஒட்டித் தயாரிக்கப்பட்ட காணொளி பேஸ்புக்கில் 192,100 முறைக்கு மேல் காணப்பட்டுள்ளது. சீன செய்தித்தளம் சாவ்பாவ்விலும் இந்தக் காணொளி இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து இவ்வாண்டு பொங்கல் சமயத்தில் இந்த மூன்று தம்பதியரில் ஒரு தம்பதிற்கு குழந்தை பிறந்தது பற்றிய செய்தி தமிழ் முரசில் வெளிவந்து முன்வந்த செய்தியைப் போல இதுவும் சிறிது காலத்திலேயே பிரபலம் அடைந்தது.
'தினமும் 1,000 பேரின் பசிதீர்க்கும் உணவகம்' என்ற மற்றொரு செய்தியும் இந்த விருதால் அங்கீகரிக்கப்பட்டது. வசதிகுறைந்தவர்கள், வேலை
யில்லாதவர்கள் என நாள்தோறும் வருபவர்களுக்கு வயிறார உணவு வழங்கும் 'கிருஷ்ணாஸ் கிட்சன்' உணவகத்தைச் சேர்ந்தோரின் உழைப்பையும் தியாகத்தையும் திரு வெங்கடேஸ்வரனின் செய்திக் கட்டுரை, வாசகர்களுக்கு வெளிக்கொணர்ந்தது. இந்தச் செய்திக் கட்டுரை கடந்தாண்டு தமிழ் முரசில் அக்டோபர் 20ஆம் தேதியிலும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 'தப்லா'வில் அக்டோபர் 25ஆம் தேதியிலும் வெளிவந்தது.
இவ்விரண்டு கட்டுரைகளும் தமக்கு விருது பெற்றுத்தந்ததை எண்ணிப் பெருமையடைவதாகக் கூறுகிறார் 27 வயது திரு வெங்கடேஷ்வரன் .
“ஆங்கில, மலாய், தமிழ் மொழி பத்திரிக்கைகளுக்கு வழங்கப்படும் இந்த விருதுகளை முதல் முறையாக தமிழ் முரசு வெல்கிறது. ‘சமூகத்தின் குரல்’ என்ற தமிழ் முரசின் கொள்கைக்கு இணங்க தொடர்ந்து பல சுவாரசியமான கதைகளை நம் சமூகத்திற்காக வழங்குவேன் என்ற நம்பிக்கை கொண்டுள்ளேன்,”
“குறிப்பாக 'சிங்கப்பூர்-தமிழகக் காதல்' என்ற தலைப்பில் வெளிவந்த செய்திக் கட்டுரை சக செய்தியாளர்களிடேய பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த செய்திக்கான காணொளியைப் பார்த்து பலரும் மனம் உருகினர். சமூக ஊடகங்களிலும் இந்த செய்தியின் இணைப்பு பரவலாக பகிரப்பட்டது. அத்துடன் கிருஷ்ணாஸ் கிட்சன் கதையும் என் மனதில் ஆழமாக பதிந்த ஒன்று. இந்த உணவகத்தின் உன்னத சேவைகளை அங்கீகரிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார் திரு வெங்கடேஷ்வரன்.
'சிங்கப்பூர்-தமிழகக் காதல்' கட்டுரை கடந்த ஆண்டின் சிறந்த செய்திக் கட்டுரைக்கான பிரிவில் நியமனம் பெற்றது. தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், பிசினஸ் டைம்ஸ், தி நியூ பேப்பர், பெரித்தா ஹரியான், தமிழ் முரசு ஆகிய செய்தித்தாட்களிலிருந்து இந்த உயர்ந்த விருதுக்கு நியமிக்கப்பட்ட இரு கதைகளில் வெங்கடேஷ்வரனின் சிங்கப்பூர்- தமிழகக் காதல் கதையும் அடங்கும். எனினும் ‘Puzzling case of SMC’s judgment on a doctor who was fined$100,000”) என்ற தலைப்பில் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தியாளர் சால்மா காலிக் புனைந்த கட்டுரை இப்பிரிவில் விருதை வென்றது.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விருது நிகழ்ச்சியில் கடந்த ஆண்டுக்கான சிறந்த செய்தியாளர் விருது ஜொய்ஸ் லிம் பீ சுவாவுக்கும் சிறந்த இளம் செய்தியாளர் டி சுவோவுக்கும் வழங்கப்பட்டன. இவர்கள் இருவருமே 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தியாளர்கள்.