சிங்கப்பூரிலுள்ள இரண்டு பள்ளிகளில் கொவிட்- 19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அங் மோ கியோவிலுள்ள 'லிட்டில் ஜெம்ஸ்' (Little Gems) ஆரம்பப் பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்ததை அடுத்து அந்தப் பள்ளி ஏப்ரல் 14ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டது. அத்துடன் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கும் பிள்ளைகளுக்கும் விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட ஆசிரியர் கடைசியாக அந்த நிலையத்தில் இருந்ததாக மார்ச் 31ஆம் தேதியன்று இருந்ததாக ஆரம்ப பிள்ளைப்பருவ மேம்பாட்டு அமைப்பு தெரிவித்தது. அவருக்கு இந்நோய் உறுதிசெய்யப்பட்ட விவரத்தை சுகாதார அமைச்சு சனிக்கிழமை தெரிவித்ததாக அந்த அமைப்பு கூறியது.
ஏப்ரல் 15ஆம் தேதியன்று அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் பெற்றோருக்காக வரையறைக்கு உட்பட்ட சேவைகளை மீண்டும் தொடங்கும் முன்னர் அந்த பாலர் பள்ளி சுத்தம் நன்றாக செய்யப்படும்.
ரோச்சோர் ரோட்டிலுள்ள 'கேப்லன்@வில்கி-எட்ஜ்' தனியார் பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவருக்கு இக்கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்தப் பள்ளிக்கு நேற்று தெரிவிக்கப்பட்டது.
கேப்லன் அடிப்படை பட்டயத் திட்டத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மாணவர் கடைசியாக மார்ச் 30ஆம் தேதியன்று வகுப்புக்காக பள்ளி வளாகத்திற்கு வந்ததாக அந்தப் பள்ளி தனது மாணவர்களுக்கு அனுப்பிய குறிப்பில் தெரிவித்தது. தற்போது அந்தப் பள்ளியின் அனைத்து வகுப்புகளும் இணையம் வழி நடத்தப்படுகின்றன.
சனிக்கிழமை நண்பகல் நிலவரப்படி சிங்கப்பூரில் தற்போது 1,180 கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 297 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். இது வரை ஆறு பேர் உயிரிழந்தனர்.