ஜோகூர் பாரு: சிங்கப்பூரில் தங்கி இருக்கும் மலேசியர்களில் மேலும் பலர் தாயகம் திரும்புவார்கள் என்று மலேசியாவின் ஜோகூர் மாநில குடிநுழைவுத்துறை எதிர்பார்க்கிறது.
கொரோனா கிருமித் தொற்றைத் துடைத்து ஒழிப்பதற்காக சிங்கப்பூர் எடுத்துவரும் மிகக்கடுமையான நடவடிக்கைகளே இதற்குக் காரண மெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோகூர் பாருவில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் குடிநுழைவு மற்றும் தனிமை வளாகம் வழியாகவும் இரண்டாவது பாலத்தில் இருக்கும் காம்ப்ளக்ஸ் சுல்தான் அபு பக்கர் வழியாகவும் அதிகம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்து அதற்குத் தாங்கள் ஆயத்தமாக இருப்பதாக ஜோகூரின் குடிநுழைவுத்துறை இயக்குநர் பகாருதீன் தாஹிர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் இருந்து மார்ச் 18 முதல் மார்ச் 31 வரை வந்தவர்களைவிட ஏப்ரல் 1 முதல் 14 வரை தாயகம் திரும்பும் மலேசியர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று ஜோகூர் குடிநுழைவுத் துறை எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் வேலை பார்க்கும் மலேசியர்கள் எதிர்நோக்கும் பல கட்டுப்பாடுகளே இதற்குக் காரணம் என்று ஜோகூர் பாருவில் அவர் சனிக்கிழமை கூறினார்.
சிங்கப்பூர் பல நடவடிக்கைகளை அறிவித்து இருப்பதை அடுத்து அங்குள்ள மலேசியர்கள் நாடு திரும்ப மலேசிய அரசாங்கம் அனுமதிக்கவேண்டும் என்று ஜோகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் அக்மால் நாசிர் வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுத்து இருந்தார்.
சிங்கப்பூரில் இருந்து தாயகம் திரும்பும் மலேசியர்களுக்கு கொரோனா கிருமித்தொற்று இல்லை எனில் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள் என்று மலேசிய அரசு தெரிவித்துள்ளதாக மலேசியகினி சனிக்கிழமை குறிப்பிட்டு இருந்தது.
இதனிடையே, ஜோகூரில் கொரோனா கிருமித்தொற்று பெருகினால் அதைச் சமாளிக்க ஏதுவாக மாநிலம் முழுவதும் 54 தனிமை இடங்கள் தயாராக இருப்பதாக அந்த மாநில அரசாங்கம் அரசிதழில் குறிப்பிட்டுள்ளது.
அவற்றில் 14 இடங்கள் ஏற்கெனவே செயல்பட தொடங்கிவிட்டதாக ஜோகூர் மாநிலத்தின் சுகாதார, சுற்றுப்புறக் குழுவின் தலைவர் ஆர் வித்யானந்தன் குறிப்பிட்டார்.
தேவை எனில் இதர இடங்களை அரசாங்கம் அடையாளம் காணும் என்றும் அந்த இடங்களைத் தனிமை நிலையங்களாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.
பொருத்தமான ஹோட்டல்கள், தனியார் கட்டடங்கள், ஆகியவை அவற்றில் அடங்கும் என்றும் வித்யானந்தன் தெரிவித்தார்.
இவ்வேளையில், சிங்கப்பூரில் வேலை பார்க்கும் மலேசியர்கள் தன்னைத் தொடர்பு கொண்டு பலவற்றையும் பற்றி விசாரித்து வருவதாகவும் ஊர் திரும்புவோருக்கு கிருமித்தொற்று இல்லை என்பதைத் தெரிவிக்கும் பத்திரங்கள் தேவை என்று மலேசிய குடிநுழைவுத்துறை கட்டாயமாகக் கேட்பதால் தாங்கள் தாயகம் திரும்ப முடியவில்லை என்று அவர்கள் புகார் தெரிவிப்பதாகவும் ஸ்துலாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆண்ட்ரு சென் குறிப்பிட்டார்.
இதன் தொடர்பில் உதவும்படி சிங்கப்பூரின் சுகாதார அமைச்சர், மனிதவள அமைச்சருடன் தான் தொடர்பு கொண்டு கேட்டதாகவும் அவர் கூறினார்.