நாட்டு மக்களுக்கு நன்றி கூறிய பிரிட்டிஷ் பிரதமர்
பிரிட்டனில் முடக்கநிலைக்கு இணங்கி நடந்துகொண்ட மக்களுக்கு அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் நன்றி தெரிவித்துக்கொண்டார். இதன் மூலம் பிரிட்டனில் கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவருவது சாத்தியமானதாக அவர் சொன்னார்.
கொவிட்-19 கிருமித்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வந்த அவர், இன்று (ஏப்ரல் 27) பணிக்குத் திரும்பினார்.
கிருமித்தொற்று பாதிப்பிலிருந்து மீண்ட பிறகு, நாட்டு மக்களை முதன்முறையாக சந்தித்துப் பேசிய திரு ஜான்சன், கிருமிப் பரவலில் இருந்து மீளும் முக்கிய தருணத்தில் பிரிட்டன் இருப்பதாகக் கூறினார்.
நாட்டில் முடக்கநிலையைப் படிப்படியாக தளர்த்துவதற்கு இனிவரும் நாட்களில் அரசாங்கம் திட்டங்களை வகுக்கும் என்று கூறிய அவர், இதுகுறித்து சில சிரமமான முடிவுகளை எடுக்க வேண்டியிருப்பதாகச் சொன்னார்.
திரு ஜான்சன் ஒரு வார காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதில் மூன்று நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் இருந்தார்.