கொரோனா கிருமிப் பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருப்பதால் தமிழகத்தில் வேலை செய்துவரும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பலரும் வருமானம் இல்லாததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
ஆனாலும், அவர்கள் பட்டினியோடு உறங்கச் செல்லக்கூடாது எனப் பார்த்துக்கொள்ளும் நல்லுள்ளம் கொண்ட சிலரும் இருக்கத்தான் செய்கின்றனர்.
அப்படி ஒருவர்தான் கோவையைச் சேர்ந்த கே.கமலாத்தாள் பாட்டி, 85. இவர் கடந்த 30 ஆண்டுகளாக இட்லி அவித்து, விற்றுப் பிழைப்பு நடத்தி வருகிறார்.
வெறும் ஒரு ரூபாய்க்கு இவர் இட்லி விற்பதால் புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் பசியைப் போக்கிக்கொள்ள முடிகிறது.
இதை அறிந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகம்மது கைஃப், டுவிட்டர் வழியாக இவருக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
“தமிழகத்தைச் சேர்ந்த 85 வயதான கே.கமலாத்தாள் பாட்டி கடந்த 30 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வருகிறார். இந்த ஊரடங்கு காலத்திலும் அவரது சேவை தொடர்கிறது. வருமான இழப்பு ஏற்பட்டாலும், 'புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் இங்கு சிக்கித் தவிக்கின்றனர்,' என்று அவர் கூறுகிறார். தன்னலமற்ற சேவையால் பலருக்கும் முன்மாதிரியாக இருக்கிறார். அவருக்கு என் வணக்கங்கள்! நம்ப முடியாத மனிதாபிமான சேவை” என்று கைஃப் தமது பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.