சேலம்: சேலம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த
கொரோனா கிருமித் தொற்று நோயாளிகள், மருத்துவர்களிடம் தங்களுக்கு வாய்க்கு ருசியாக பிரியாணி போன்ற உணவு வேண்டும் என்று கேட்டனர்.
இதற்கு மருத்துவர்கள் மறுத்து விடவே, நோயாளிகள் தாங்க ளாகவே பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுக்கு இணையம் வழி ‘ஆர்டர்’ செய்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ந்தனர்.
வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 22 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குரிய உணவு அங்கேயே வழங்கப்படுகிறது.
ஆனால் இந்த 22 பேரில் நால்வர் அசைவ உணவு வேண்டும் என மருத்துவர்களிடம் கோரினர். அதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது.
இதையடுத்து இணையம் வழி தந்தூரி சிக்கன், சிக்கன் பிரை, சிக்கன் பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகளை அவர்கள் ‘ஆர்டர்’ செய்துள்ளனர்.
இந்த உணவுகளோடு வந்த உணவக ஊழியர் ஒருவர், அரசு மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டு முன்பாக காத்திருந்தார். அப்போது மருத்துவர்கள் அவரிடம் விசாரித்தபோது நோயாளிகள் உணவுக்கு ஆர்டர் கொடுத்தது தெரியவந்தது. அவரை எச்சரித்து திருப்பி அனுப்பியதோடு தொற்று நோயாளிகளுக்கும் மருத்துவர்கள் அறிவுரை கூறினர்.