கொவிட்-19 கிருமி அச்சம் காரணமாக பொது இடங்களில் அங்கே இங்கே தொடக்கூட பலரும் தயங்கும் காலம் இது. அந்த அச்சத்தைத் தணிக்க கேகே மகளிர், குழந்தைகள் மருத்துவமனை ஒரு முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. மின்படிக்கட்டுகளின் கைப்பிடிகளை தானாகவே சுத்தப்படுத்தும் கருவியைப் பொருத்தி சோதனை நடத்தி வருகிறது அம்மருத்துவமனை.
ஒரு மின்படிக்கட்டு இயந்திரத்தில் பொருத்தப்பட்டு உள்ள அந்தச் சாதனத்தின் ஆற்றல் என்னவென்று ஒரு மாத காலத்திற்குச் சோதித்துப் பார்க்கப்படும் என்று மருத்துவமனை மற்றும் சிங்ஹெல்த் (சுற்றுச்சூழல் சேவைகள்) தலைமை செயலாக்க அதிகாரி ஆல்சன் கோ கூறினார்.
“பொருத்தப்பட்டு உள்ள கருவி, நகரும் படிக்கட்டுகளின் ஓர கைப்பிடியில் கிருமிநாசினியால் தொடர்ந்து சுத்தம் செய்துகொண்டே இருக்கும். அதனால் அந்தப் படிக்கட்டுகளைப் பயன்
படுத்துவோர் கைப்பிடிகளில் கை வைக்கும்போது நம்பிக்கையையும் பாதுகாப்பையும் உணருவார்கள்,” என்றார் அவர்.
‘வீ கிளீன்’ என்னும் அக்கருவியை ‘ஸ்விட்’ என்னும் தென்கொரிய நிறுவனம் வடிவமைத்து உள்ளது. அதன் விலை $9,800. கைப்பிடிகளைச் சுத்தப்படுத்த மூன்றுவித நடைமுறைகளை அக்கருவி செயல்படுத்தும்.
முதலில் 1.5 விழுக்காடு ஹைட்ரஜன் பெராக்சைட் அடங்கிய கிருமி நாசினி கைப்பிடியில் தடவப்படும். பின்னர் துணி உருளை மூலம் துடைக்கப்படும். இறுதியாக, புற ஊதா எல்இடி விளக்கின் கீழான நுண்ணுயிர் நீக்கம் நடைபெறும்.
மேலும், எத்தனை பேர் மின்
படிக்கட்டை ஒரே நேரத்தில் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கணக்கிடும் தொழில்நுட்பமும் அக்கருவியில் இருக்கும். அதிகமானோர் பயன்படுத்தினால் கருவியின் ஆற்றல் கூட்டப்படும். தென்கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள கடைத்தொகுதிகளில் இதுபோன்ற கருவிகள் பயன்பாட்டில் உள்ளன.
சுத்தப்படுத்தப் பயன்படுத்தப்படும் கிருமிநாசினியால் கண்ணுக்கோ தோலுக்கோ எரிச்சலைத் தராது என்று தென்
கொரியாவில் சான்றளிக்கப்பட்டு உள்ளதாக ‘வீ கிளீன் சிங்கப்பூர்’ நிறுவனத்தின் தலைமை வர்த்தக மேம்பாட்டு அதிகாரி இங் டாய் ரோங் கூறினார்.
தானாக சுத்தப்படுத்தும் கருவியின் ஆற்றலை அறிய கடந்த பிப்ரவரி மாதம் முதல் இரு மருத்துவமனைகள், மூன்று கடைத்தொகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் குறைந்தபட்சம் எட்டு முறை சோதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.