கொரோனா கிருமித்தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தி இருப்பதாகக் கூறுகிறார் அமலா பால்.
இந்த ஊரடங்கு வேளையில் புதிதாக எதையும் கற்றுக்கொள்ள முடியவில்லை என்று புலம்பவோ வருத்தப்படவோ வேண்டாம் என்றும் தமது சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கை என்றாலே போட்டி, பந்தயம் என்று நினைக்கும் மனோபாவத்தில் இருந்து அனைவரும் மாறவேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், பிரஷர் குக்கர் வாழ்க்கையில் இருந்து வெளியே வாருங்கள் என்று மன அழுத்தம் குறித்தும் தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
“இந்த ஊரடங்கு காலத்தில் புதிதாக எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றோ, புத்தகங்களைப் படிக்கவில்லை என்றோ வருத்தப்பட வேண்டாம். இது கற்றுக்கொள்வதற்கான நேரமோ அல்லது உற்பத்தியைப் பெருக்குவதற்கான நேரமோ அல்ல.
“எனவே அமைதியாக இருங்கள். ஒருவர் செய்வதை நாமும் செய்யவேண்டும் என்கிற அவசியம் இல்லை. மேலும் அப்படிப்பட்டவர்களின் பின்னால் ஓடவேண்டிய தேவையும் இல்லை,” என்கிறார் அமலாபால்.
இவர் இவ்வாறு அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், நடிகை லட்சுமி ராய், புலம்பெயர் தொழிலாளர்களின் பரிதாப நிலை குறித்து கவலையை வெளிப்படுத்தி உள்ளார்.
கொரோனா கிருமித்தொற்று என்பது இயற்கையின் கோபம் எனவும் வர்ணித்துள்ளார்.
“கடவுள்தான் உலகைக் காப்பாற்ற வேண்டும். இனி இதையெல்லாம் பார்க்க முடியாது.
“புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி செய்து அவர்களைக் காப்பாற்றுவோம்.
“இந்தக் கடுமையான காலமும் நம்மைவிட்டுக் கடந்து போகும். விரைவில் நல்ல காலம் பிறக்கும் என்று நம்புவோம்” என்று லட்சுமி ராய் தமது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.