சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் பிரதமர் லீ சியன் லூங்கின் உடல்நிலை சீராக இருப்பதை உறுதி செய்துள்ளன. இருந்தபோதும், மருத்துவர்களின் அறிவுரைப்படி வரும் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை ஒரு வார காலத்திற்கு பிரதமர் லீ மருத்துவ விடுப்பில் இருப்பார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன், இவ்வார மத்தியில் திட்டமிடப்பட்டிருந்த பிரதமரின் இந்தோனீசியப் பயணமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
"தற்காலிகமாக ரத்த அழுத்தம் குறைந்ததாலும் நீண்ட நேரம் நின்றிருந்ததால் ஏற்பட்ட களைப்பாலும் நீர்ச்சத்து குறைந்ததாலும் தேசிய தினப் பேரணி உரையை ஆற்றிக்கொண்டிருந்தபோ து பிரதமருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரது இதயத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் பக்கவாத பாதிப்பு எதுவுமில்லை என்றும் மருத்துவர்கள் உறுதி செய்தனர்," என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. இதற்கிடையே, "உங்கள் அனைவரின் அக்கறைக்கும் வாழ்த்துகளுக்கும் எனது இதயங் கனிந்த நன்றி. பேரணிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் சந்திக்க முடியாமல் போனதற்கு என்னை மன்னியுங்கள்.
பேரணி முடிந்ததும் முழுமையான மருத் துவப் பரிசோதனைக்காக நேராக சிங்கப்பூர்ப் பொது மருத்துவ மனைக்குச் சென்றுவிட்டேன். "எனக்கு எந்த உடல்நலக் கோளாறும் இல்லை, நலமாக இருக்கிறேன் என்று மருத்துவர்கள் கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆயினும், அவர்கள் என்னை ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ள தால் ஒரு வார காலத்திற்கு நான் மருத்துவ விடுப்பில் இருப் பேன்," என்று நேற்றுப் பிற்பகலில் பிரதமர் லீ ஃபேஸ்புக் மூலம் தெரிவித்தார்.