சென்னை: சென்னையில் மக்கள்தொகை பெருக்கம் அதிகமாக இருப்பதால்தான் கொரோனா கிருமித் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இன்னும் இரு வாரங்களில் இங்கு இந்தக் கிருமி பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு, நல்ல ஒரு மாற்றம் தெரிய ஆரம்பிக்கும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
“சென்னையில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளையில், இக் கிருமித்தொற்று அதிகம் பாதித்துள்ள பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன,” என்று பிரகாஷ் மேலும் கூறினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பிர காஷ் கூறுகையில், “சென்னையில் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் புதிய கிருமித் தொற்று சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை.
“சென்னையில் வீடுவீடாகச் சென்று ஆய்வுகள் நடத்தி வருகிறோம். நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து புதுப் புது வியூகம் வகுக்கப்படுகிறது. இன்னும் இரு வாரங்களில் சென்னையில் பரவும் கிருமித் தொற்று கட்டுப்படுத்தப்படும்.
“கிருமிப் பரவலைத் தடுக்கவே மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை நீடிக்கிறது,” என்றார்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
சென்னையில் இதுவரை 14,802 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவலைத் தடுப்பது குறித்து சுகாதாரத்துறை, மாநகராட்சி அதிகாரிகளுடன் இந்த ஆலோ சனைக் கூட்டமானது நடைபெற உள்ளது.
இதற்கிடையே, சென்னையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நால்வர் கிருமித் தொற்றால் நேற்று உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
கிருமி பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,333 ஆக அதிகரித்துள்ளது. இதில் 12,757 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
“தற்போது 9,400 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 173ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 129 பேர் உயிரிழந்துள்ளனர்.
“தமிழகத்தில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,286 பேரும் 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 18,995 பேரும் 60 வயதை கடந்தவர்கள் 2,052 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
“தமிழ்நாட்டில் புதிய உச்சமாக ஞாயிறன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதியானது. “இவர்களில் சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 804 பேருக்கு கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மொத்த பாதிப்பு 14,802ஆக உயர்ந்துள்ளது. 7,891 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்,” என்று கூறப்பட்டுள்ளது.