நீண்டகால அனுபவமுள்ள திடல்தடப் போட்டி பயிற்றுவிப்பாளரான லோ சியாங் பியாவ் பதின்மவயது திடல்தடப் போட்டி வீராங்கனை ஒருவரை மானபங்கம் செய்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தக் குற்றத்தை லோ 2013ஆம் ஆண்டில் புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை தொடங்கி மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது.
குற்றம் நிகழ்ந்தபோது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 18 வயது. அப்பெண்ணின் தொடைகளை லோ பிடித்துவிட்டுக்கொண்டிருந்தபோது அவரை மானபங்கம் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அப்பெண்ணை லோ இருமுறை மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது.
2013ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கும் மார்ச் மாதம் 17ஆம் தேதிக்கும் இடையிலான இரு ஞாயிற்றுக்கிழமைகளில் பழைய தெம்பனிஸ் விளையாட்டரங்கில் அந்த இளம் திடல்தடப் போட்டி வீராங்கனையை லோ மானபங்கம் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
தமக்கு எதிராகப் பதிவான குற்றச்சாட்டுகளுக்கு சிங்கப்பூர் திடல்தட சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவரான லோ, வழக்கு விசாரணை கோரினார்.
இந்நிலையில், அவர் மீது இன்னொரு பெண்ணும் குற்றம் சுமத்தினார். அப்போது அவருக்கு 16 வயது. ஆனால் அவர் தமது குற்றச்சாட்டுகளை திரும்பப்பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
லோ மீது குற்றம் சுமத்திய இரு பெண்களின் பெயர்களையும் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் தேசிய ஓட்டப் பந்தய வீரரான லோ, பயிற்றுவிப்பாளராக இருந்து பல தேசிய திடல்தடப் போட்டி வீரர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார். மேலும், அவர் சிறைத்துறையில் துணை கண்காணிப்பாளராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கான தண்டனை இம்மாதம் 26ஆம் தேதி தெரிவிக்கப்படும். இம்மாதம் 26ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.
அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.