நோய் முறியடிப்புக் காலம் முடிவடைந்து இம்மாதம் 2ஆம் தேதி தளர்வு நடவடிக்கைகளின் முதற்கட்டம் நடப்புக்கு வந்தாலும் உணவங்களிலும் உணவுபானக் கடைகளிலும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவுண்ணுதலுக்கு இப்போதைக்கு அனுமதிக்கப்படாது என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
“இத்தகைய செயலால், சமூகத்தில் பலரும் உணவங்களுக்கும் உணவு பானக் கடைகளுக்கும் உணவுண்ண திரண்டு செல்வார்கள் என்றும் அதுவே கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் மீண்டும் அதிகமாக தலையெடுக்க சாதகமாக அமைந்துவிடும்.
“இந்த நிலை ஏற்பட்டால் வேறு வழியின்றி, அரசாங்கம் மீண்டும் கடுமையான பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருக்கும்.
ஆகவே , அதிக கூட்டத்தை ஈர்க்கக்கூடிய, உணவகங்களில், உணவு பானக் கடைகளில் அமர்ந்து உணவுண்ணும் முறைக்கு மட்டும் அனுமதி வழங்குவது நன்மையளிக்காது,” என்று அமைச்சர் விளக்கினார்.
உணவகங்களில், உணவு பானக் கடைகளில் அமர்ந்து உணவுண்ணுதலுக்கு முன்னரே அனுமதி வழங்கப்படவேண்டும் என்றும் தளர்வு நடவடிக்கையின் இரண்டாம் கட்டம் வரை காத்திருந்தால், அது தங்கள் வர்த்தகத்தை மேலும் பாதிக்கக்கூடும் என்றும் பல உணவு பானக் கடைக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றும் முறையான பாதுகாப்பு இடைவெளி விதிகளைக் கடைப்பிடித்தால் அவ்வாறு செய்ய அனுமதிக்கலாமா என்று மவுண்ட்பேட்டன் தொகுதி உறுப்பினர் லிம் பியாவ் சுவான் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சுகள் நிலைப் பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு கான், “உணவகங்களில், உணவு பானக் கடைகளில் அமர்ந்து உணவுண்ணுதலை விரைவில் அனுமதிக்க நாங்கள் தயாராக இல்லை . அது இன்னும் அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் தலையெடுக்க
காரணமாக அமைந்துவிடும். அதனால், கடுமையான நடவடிக்கைகளை மீண்டும் அறிவிக்கப்படக்கூடும்.
இதன் விளைவாக தளர்வு நடவடிக்கையின் இரண்டாம் கட்டத்தை ரத்து செய்யவோ அல்லது தாமதப்படுத்தவோ நேரிடலாம். “ஆக, தளர்வு நடவடிக்கையின் முதற்கட்டத்தைப் பாதுகாப்புடன் மேற்கொள்வோம். அந்த வெற்றிக்குப் பிறகு இரண்டாம் கட்டத்தைப் பாதுகாப்பாக நடைமுறைப்படுத்தலாம்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
கிருமித்தொற்று சம்பவங்கள் தொடர்ந்து குறைவாகவும் நிலையுடனும் இருந்தால் இம்மாத இறுதிக்குள் தளர்வு நடவடிக்கையின் இரண்டாம் கட்டத்தை அறிவிக்கலாம் என்றும் இது குறித்து இம்மாத நடுப்பகுதியில் முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சுகள் நிலைப்பணிக்குழுவின் மற்றோர்
இணைத் தலைவரும் தேசிய வளர்ச்சி அமைச்சருமான லாரன்ஸ் வோங் இதற்கு முன் தெரிவித்திருந்தார்.
ஆக, சிங்கப்பூர் சற்று பொறுமையுடன் இருந்து, சமூக அளவிலான கிருமித்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்யில்
ஆதரவளிக்குமாறும் சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டார்.