சிங்கப்பூரில் புதிதாக 383 பேரைக் கொரோனா கிருமி தொற்றியுள்ளது. இதனுடன் சிங்கப்பூரின் மொத்த கொரோனா கிருமித்தொற்றின் எண்ணிக்கை 37, 910க்கு உயர்ந்தது. இவற்றில் 14 சமூக அளவிலான சம்பவங்கள்.
இந்த 14 பேரில் 10 சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள். மற்ற நால்வர் வேலை அனுமதிச் சீட்டு அல்லது மாணவர் அனுமதிச் சீட்டை வைத்திருப்பவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சுகாதார அமைச்சு முனைப்புடன் நோய்ச்சம்பவங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியின் அங்கமாக இந்தச் சம்பவங்களில் ஒன்பது பேர் சோதனை செய்யப்பட்டனர்.
இந்த ஒன்பது பேரில் அறுவர், பள்ளி ஊழியர்களுக்குச் செய்யப்ப்டட சோதனைகளின்வழி கண்டுபிடிக்கப்பட்டனர். இவர்கள், 'ஏங்கிலிக்கன் ஹை' பள்ளி, 'சிஎச்ஐஜே செயிண்ட் தெரேசாஸ் கான்வண்ட்' பள்ளி, கேலாங் மெத்தடிஸ்ட் உயர்நிலைப் பள்ளி, ஹுவா சோங் கல்வி நிலையம், அஸென்ஷியா அனைத்துலகப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்தவர்கள்.
எஞ்சியோருக்குத் தொற்றுநோயியல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட பிறர் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளைச் சேர்ந்தவர்கள்.