இந்தியா பொருளியல் சீர்திருத்தங்களை மேலும் விரைவுபடுத்துவது அவசியம் என துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் கூறியிருக்கிறார். இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் அவர் இக்கருத்தை வெளியிட்டார். வேலைகளை உருவாக்குவதற்கும் மேம்பட்ட செழிப்பை உறுதி செய்வதற்கும் அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா எட்டு முதல் 10 விழுக்காடு வரை வளர்ச்சி காண வேண்டியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். 'இந்தியாவை மாற்றியமைத்தல்' திட்டத்தின் முதல் ஆண்டு நிறைவை ஒட்டிய மாநாட்டில் கலந்துகொண்ட திரு தர்மன் 'உலகளாவிய பொருளியலில் இந்தியாவின் ஆற்றல் வளம் முழுமை பெறுதல்' எனும் தலைப்பில் உரையாற்றினார். இந்த மாநாட்டில் உயர்மட்ட அமைச்சர்கள், அதிகாரிகள், அறிஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் பொருள், சேவை வரி குறித்த மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டாலும் நிலம் கையகப்படுத்துதல், தொழிலாளர் தொடர்பான செயல்பாடுகள், அரசு எந்திரம் செயல்படாமல் முடங்கிக் கிடக்கும் நிலை ஆகியவற்றில் இன்னும் சீர்திருத்தம் ஏற்பட வில்லை. வெளிநாட்டுத் தலைவர்கள் இந்தியாவைப் பற்றி உரையாற்று வது, மேம்பாட்டு உத்திகளை வழங்குவது ஆகியவற்றைக் கருப்பொருளாகக்கொண்ட மாநாட்டை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். சிங்கப்பூரும் இந்தியாவும் நெருக்கமான அரசியல், பொருளியல் உறவுகளைக் கொண்டுள்ளன. ஆசியானுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள இந்தியாவுக்கு சிங்கப்பூர் உதவி வருகிறது.
2005ஆம் ஆண்டில் $16.6 பில்லியனாக இருந்த இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் 2013ஆம் ஆண்டில் $25.5 பில்லியனாக உயர்ந்ததுடன் இரு நாடுகளைச் சேர்ந்த பல உயர்நிலைத் தலைவர்களும் அதிகார பூர்வப் பயணங்கள் மேற்கொண்டனர். தற்போதைய பயணத்தின் போது திரு தர்மன் இந்தியாவின் பல தலைவர்களைச் சந்திப்பார்.
புதுடெல்லியில் மாநாட்டைத் தொடங்கி வைத்த இந்தியப் பிரதமர் மோடியுடன் இந்தியாவின் பொருளியல் வளர்ச்சி குறித்து மாநாட்டில் உரையாற்றிய துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் (இடது). படம்: இந்திய ஊடகத் தகவல் பிரிவு