புதிய பக்கத்தான் ஹரப்பான் பிளஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக டாக்டர் மகாதீர் முகம்மது நிறுத்தப்படும் யோசனையை பிகேஆர் மத்திய தலைமைத்துவக் குழு நிராகரித்துவிட்டது.
தனது கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமை அந்தப் பதவிக்குப் பரிந்துரைப்பதிலேயே உறுதியாக இருப்பதாகவும் பிகேஆர் இன்று (ஜூன் 19) தனது அறிக்கையில் தெரிவித்தது.
அந்த அறிக்கையில் மத்திய தலைமைத்துவக் குழு உறுப்பினர்களும் பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டு உள்ளனர்.
மக்கள் தீர்ப்பை நிலைநாட்டும் நோக்கத்துடனும் மலேசியாவைக் காப்பாற்றும் கடப்பாடுடனும் டாக்டர் மகாதீர் உள்ளிட்ட எல்லாக் கட்சிகளின் தலைவர்களுடனும் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளனர்.
“இருந்தபோதிலும் பிரதமர் வேட்பாளராக டாக்டர் மகாதீரை நிறுத்தும் யோசனையை ஏற்பதில்லை என்று கட்சி முடிவு செய்துள்ளது. அன்வார் இப்ராகிமையே அப்பதவிக்கு நிறுத்துவது என்னும் பக்கத்தான் ஹரப்பானின் ஒருமித்த கருத்தை ஆதரிப்பதையே தொடரவும் கட்சி தீர்மானித்து உள்ளது.
“பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியைப் பலப்படுத்த கெஅடிலான் (பிகேஆர்) கடப்பாடு கொண்டுள்ளது. அடுத்து வரப்போகும் நாட்களில் மக்களின் தீர்ப்பை நிலைநிறுத்தும் அதே உணர்வு கொண்ட கட்சிகளின் பலத்தை ஒருமுகப்படுத்தும் பணியை கட்சி தொடரும்,” என்று பிகேஆர் தெரிவித்து உள்ளது.
ஒருவேளை பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதில் முழுக்கவனத்தையும் செலுத்த கட்சி தயாராக இருப்பதாகவும் அது தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online