புத்தாண்டுத் தொடக்கத்தில் வடிவேலு மூன்று படங்களில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'எலி' படத்திற்குப் பின் சற்று ஓய்ந்திருந்த வைகைப் புயல் மீண்டும் படங்களுக்கான கதைகளின் விவாதங்களில் கலந்துகொண்டு வருகிறார். 'தெனாலிராமன்', 'எலி' என இரண்டு படங்கள் மூலம் மீண்டும் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இதில் 'எலி' படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. அதோடு வேண்டுமென்றே பலர் பல விமர்சனங்களையும் கிளப்பிவிட்டனர்.
இதனால் அதன்பிறகு வடிவேலு மீண்டும் நகைச்சுவை வேடத்தில் மட்டும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரோ, நான் நகைச்சுவை நடிகனாக நடிப்பதாக இருந்தால் நாயகர் போன்ற வேடம், அவர்களுக்கு இணையான சம்பளம் வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தார். இதனால் அவர் நடிக்கவிருந்த 'தெறி' படவாய்ப்புக்கூட 'நான் கடவுள் ராஜேந்திரனு'க்குக் கைமாறிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், புத்தாண்டு பிறந்த பிறகு புதிய படங்களில் நடிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்த வடிவேலு, தற்போது அடுத்தடுத்து மூன்று படங்களில் நாயகனாக நடிக்க தயாராகிவிட்டாராம்.
அதில் ஒரு படத்தின் கதை விவாதம் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. அதோடு, விஜய்சேதுபதியை வைத்துக் 'காதலும் கடந்து போகும்' படத்தை இயக்கிய நலன்குமாரசாமியும் அடுத்து வடிவேலுவை வைத்து ஒரு படம் இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.