வலுவற்ற சுகாதார அமைப்பை கொண்டுள்ள இந்தோனீசியாவில் கிருமித்தொற்றுக்கு சுமார் 200க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மாண்டிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
பிறந்த சிசு உட்பட ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களும் அவர்களில் அடங்குவர் என்று கூறுகிறது இந்தோனீசிய குழந்தை நல அமைப்பு.
அந்த அமைப்பு வெளியிட்ட கிருமித்தொற்று புள்ளி விவர அறிக்கையில், இந்தோனீசியாவில் கிருமித்தொற்று கண்டறியப்பட்ட மார்ச் மாதத்திற்குப் பிறகு குறைந்தது 1,543 சிறுவர்களுக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர்களில் 36 சிறுவர்கள் மாண்டுவிட்டனர்.
இதுதவிர, கொரோனா அறிகுறியுள்ள, ஆனால் கிருமித்தொற்று பரிசோதனை செய்யப்படாதவர்கள் என்று கூறப்படும் பிடிபி பிரிவின் கீழ் சுமார் 6,123 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர்களில் 204 பேர் மாண்டுவிட்டதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
கிருமித்தொற்றால் வயதானவர்களே அதிகம் உயிரிழந்து வரும் நிலையில், இந்தோனீசியாவில் சிறுவர்களின் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதற்கு வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியா முக்கியம் காரணம் என்றும் அவர்களைக் காப்பாற்ற மருத்துவப் பணியாளர்களுக்குப் போதுமான நேரம் இல்லை என்றும் பிள்ளைகள் நல அமைப்பின் தலைவரான அமான் சொன்னார்.
“ஐந்தில் நான்கு சிறுவர்கள் குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற இரைப்பை குடல் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருகிறார்கள்,” என்று சொன்ன அவர், வயிற்றுப்போக்கு அறிகுறிகளைக் கொண்ட ஒவ்வொரு பிள்ளையும் பிடிபி என்ற வகையின் கீழ் வகைப்படுத்தப்படுவர் என்றும் சொன்னார்.
“குழந்தைகளைப் பாதுகாப்பதில் எங்களிடம் குறையில்லை. ஆனால் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு இறந்துவிடக்கூடும் என்ற விழிப்புணர்வு இல்லை,” என்றார்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online