சிங்கப்பூரில் இரண்டாம் கட்ட பொருளியல் தளர்வு நடப்புக்கு வந்து ஒரு மாதம் ஓடிவிட்ட நிலையில், உள்ளூர் மக்கள் ஹோட்டல்களில் விடுமுறையைக் கழிக்கும் வாய்ப்பை விரைவில் பெறவிருக்கிறார்கள்.
கொவிட்-19 காரணமாக வரலாறு காணாத அளவுக்கு ஹோட்டல்களின் அனுபோக விகிதம் மிகவும் குறைந்து இருக்கிறது.
சுற்றுப் பயணிகள் வருகையை கிருமித்தொற்று முற்றிலும் தடுத்து இருக்கிறது. இந்தச் சூழலில் ஹோட்டல்கள், இருவித நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க அனுமதி கேட்டு இப்போது விண்ணப்பிக்கலாம் என்று சிங்கப்பூர் பயணத் துறைக் கழகம் நேற்று அறிவித்தது.
விருந்தினர்கள் விடுமுறை நாட்களை ஹோட்டல்களில் கழிக்க இடவசதியை வழங்கலாம்; பொழுதுபோக்கு இடங்களைச் சிறார்களுக்குத் திறந்துவிடலாம்.
இதற்காக ஹோட்டல்கள் விண்ணப்பிக்கலாம். இருந்தாலும் அனைவருமே நடப்பில் உள்ள பல்வேறு பாதுகாப்பு நிபந்தனைகளை முற்றிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கழகம் தெரிவித்து உள்ளது.
ஹோட்டல்களில் கூட்டத்தைக் குறைக்கவேண்டும். ஹோட்டல்களின் கூடங்களிலும் விருந்தினர்கள் தங்கும் இடங்களிலும் கூட்டத்தைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். எந்தவொரு விருந்தினர் அறையிலும் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து பேருக்கும் அதிகமானவர்களை அனுமதிக்கக் கூடாது.
தனிப்பட்ட ஒவ்வொருவரையும் பரிசோதித்து அவர்களுக்குக் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏதாவது தெரிகிறதா என்பதை ஹோட்டல்கள் கண்டறிய வேண்டும். அதற்குப் பிறகுதான் யாரையும் ஹோட்டல்கள் உள்ளே அனுமதிக்க வேண்டும்.
ஹோட்டல்கள் தூய்மையாக இருக்கவேண்டும். கிருமிநாசினி தெளித்து எல்லா இடங்களையும் சுத்தப்படுத்த வேண்டும். ஹோட்டலுக்கு வருகின்ற, வெளியே போகின்ற ஒவ்வொருவருக்கும் தேசிய அளவிலான மின்னிலக்க அனுமதி முறையை (SafeEntry) ஹோட்டல்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்.
கொவிட்-19 தனிமை இடங் களாக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள ஹோட்டல்கள் கூடுதலான நிபந்தனைகளையும் நிறைவேற்ற வேண்டி இருக்கும்.