சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு நாளை 85வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
அச்சுப் பதிப்பிலும் மின்னிலக்கத் தளத்திலும் வாசகர்களை அதிகம் ஈர்த்து வரும் தமிழ் முரசு, இந்தச் சிறப்பான தருணத்தில் இத்தனை ஆண்டுகாலமாகப் பேராதரவு வழங்கி வரும் தனது வாசகர்களுக்கு இரு வழிகளில் பரிசுகளை வெல்ல வாய்ப்பு வழங்கி நன்றி தெரிவிக்க விரும்புகிறது.
வாசகர்கள் tamilmurasu.com.sg/tm85 என்ற இணையப் பக்கத்தில் இடம் பெற்றுள்ள எளிய கேள்விக்கு விடை அளித்து, செய்தி கைக்கணினி, இலவச மின்னிதழ் சந்தா என பல பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம்.
போட்டியில் பங்கேற்பதற்கு இந்த மாதம் 31ஆம் தேதியே இறுதி நாள்.
அத்துடன், தமிழ் முரசு நாளிதழின் இப்போதைய சந்தாதாரர்களும் இந்தமாதம் 31ஆம் தேதிக்குள் புதிதாகச் சந்தாதாரர்கள் ஆவோரும் அதிர்ஷ்டக் குலுக்கலின் மூலம் $3,500க்கும் மேலான மதிப்புடைய பரிசுகளை வெல்லும் வாய்ப்பு பெறுவர்.
மேல் விவரங்களை tmsub.sg/tm85 என்ற இணையப்பக்கத்தில் காணலாம்.
இதனிடையே, 85வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் தமிழ் முரசு நாளிதழுக்கு பிரதமர் லீ சியன் லூங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“85 ஆண்டுகளுக்குமுன் தொடங்கப்பட்டதில் இருந்து, சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்தின் குரலாகவும் நாட்டு நடப்புகளைத் தமிழ்ச் சமூகம் தெரிந்து கொள்ள ஒரு தளமாகவும் விளங்கி, தமிழ் முரசு முக்கிய பங்காற்றி வருகிறது.
“வாசகர்களைச் சென்றடைய புதிய தளங்களையும் அவர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்க புதிய வழிமுறைகளையும் உருவாக்கி, தமிழ் முரசு சிங்கப்பூரோடு சேர்ந்து வளர்ந்து வந்து இருக்கிறது.
“வாசகர்களுக்கு விசுவாசமாகவும் உண்மைகளுக்கு நேர்மையாகவும் இருந்து, ஊடகத் துறையில் நிகழ்ந்து வரும் கடுமையான மாற்றங்களை எதிர்கொண்டு, சமூகத்திற்குச் சிறந்த சேவையாற்றுவதைத் தமிழ் முரசு தொடரும் என உறுதியாக நம்புகிறேன்,” என்று பிரதமர் லீ கூறியுள்ளார்.
இத்தனை ஆண்டுகளாக ஆதரவு வழங்கி வரும் வாசகர்களுக்குத் தமிழ் முரசு ஆசிரியர் ஜே.ராஜேந்திரன் நன்றி தெரிவித்துக்கொள்கிறார்.