‘உள்கட்டமைப்புத் திட்டங்களால் குறிப்பிடத்தக்க மாற்றம் வரும்’
மார்சிலிங்-இயூ டீ வட்டாரத்தில் பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் வரும் என்று மக்கள் செயல் கட்சியின் அணியை வழிநடத்தும் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் உறுதியளித்துள்ளார். கொவிட்-19 நெருக்கடியால் வேலையும் வருமானமும் பாதிக்கப்பட்டோருக்கு மசெக அணி உதவும் என்றும் அவர் நேற்று இடம்பெற்ற கட்சி அரசியல் ஒளிபரப்பின்போது கூறினார். நகர மையங்கள் உருமாற்றம் பெறும் என்றும் புதிய போக்குவரத்து நிலையங்கள் மூலம் இணைப்புகள் மேம்படும் என்றும் அணியைச் சேர்ந்த அலெக்ஸ் யாம் தெரிவித்தார். சட்ட உரிமைகள் மற்றும் சட்டரீதியான உதவி பெறுவதற்கான வழிகள் குறித்து குடியிருப்பாளர்களுக்கு உதவுவது தொடர்பில் புதிய வேட்பாளர் ஹேனி சோ பேசினார். நெருக்கடி காலத்தை சிங்கப்பூரர்கள் எதிர்கொள்ள தமது அணியினர் உதவுவர் என்று தேசிய வளர்ச்சி, மனிதவள அமைச்சுகளின் துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது கூறினார்.
‘கம்பத்து உணர்வு மாறாமல் பெருந்திட்டங்கள் நிறைவேறும்’
புதிய பலதுறை மருந்தகம் முதல் சமூகப் பண்ணை வரை நீ சூன் குழுத் தொகுதியில் குறைந்தது 15 பெருந்திட்டங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் நேற்று கூறினார். தற்போதுள்ள வசதிகளும் மேம்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். அனைவருக்கும் சுகாதாரப் பராமரிப்பு வசதிகள் எளிதாகக் கிட்டும் வகையில் ஈசூன் வட்டாரம் மேம்பாடு காணும் என்றார் அவர். இவருடன் இணைப் பேராசிரியர் முகமது ஃபைஷல் இப்ராஹிம், திரு லூயிஸ் இங், புதுமுகங்களான டெரிக் கோ மற்றும் கேரி டான் ஆகியோர் ஐந்து உறுப்பினர் மசெக அணியினராக இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
‘தனித் தொகுதி என்றாலும் தனி நகர மன்றம் இயங்கிடும்’
பீஷான்-தோ பாயோ குழுத் தொகுதியிலிருந்து மேரிமவுண்ட் தனித் தொகுதி பிரிந்து வந்தாலும் அதற்கென தனி ஒரு நகர மன்றம் இருக்கும் என்று மசெகவின் புதிய வேட்பாளர் திருவாட்டி கான் சியோ ஹுவாங் நேற்று கூறினார். கட்டுப்படியாகக்கூடிய செலவுகள் மற்றும் உயர்தர பராமரிப்பை உறுதிசெய்ய இந்நகர மன்றம் உதவும் என்றார் அவர். வேலை தேடுவோருக்கு உதவுவதில் தாம் முதலில் கவனம் செலுத்துவார் என்றும் அவர் உறுதியளித்தார்.