சென்னை: அடுத்து சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.
“சசிகலாவின் உறவு அதிமுக வுக்கு தேவையில்லை,” என்று கூறியுள்ள ஜெயக்குமார், “அதிமுக கட்சியிலோ ஆளுங்கட்சியின் ஆட்சியிலோ சசிகலாவுக்கு துளியும் இடமில்லை. ஏற்கெனவே அதிமுகவில் எடுக்கப்பட்ட முடிவே நாளையும் தொடரும்,” என்றார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “அமைச்சரில் இருந்து அதிகாரிகள் வரை அனைவருக்கும் கொரோனா தொற்று பரவி வருகிறது. கொரோனா பரவும் அச்சம் உள்ள நிலையிலும் உயிரையும் பணயம் வைத்து நாங்கள் களப்பணியாற்றி வருகிறோம்.
“எங்களுக்கு விளம்பரம் தேவையில்லை. நாங்கள் யார் என்று மக்களுக்கு தெரியும். சசிகலா இல்லாமல் அதிமுக ஆட்சியை நடத்துவதுதான் எங்கள் முடிவு,” என்றார்.
இத்தகவல் அமமுக கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.