இந்தியாவில் சாதனை அளவாக நேற்று 30,142 பேருக்கு கிருமித்தொற்று பதிவாகியுள்ளது.
அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, இன்று காலை நிலவரப்படி அங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,36,994.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தொடர்ந்து கிருமித்தொற்று எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. கிருமித்தொற்று இரண்டாமிடத்தில் இருந்த பிரேசிலில் கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வெள்ளிக்கிழமை முதல் குறைந்து வருகிறது. அதனையடுத்து, தினசரி கிருமித்தொற்று பதிவில் இந்தியா பிரேசிலை பின்னுக்குத் தள்ளியிருக்கிறது.
மொத்த எண்ணிக்கையில் பாதிக்கும் அதிகமானோர் மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் 150,935 பேரும் தமிழகத்தில் 48,199 பேரும் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் 311,565 பேர் சிகிச்சை பெறுகின்றனர் என மத்திய சுகாதார அமைச்சக சிறப்பு அதிகாரி ராஜேஷ் பூஷண் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரில் 86 விழுக்காட்டினர் மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகம், டெல்லி, ஆந்திரா, உத்தரப்பிரதேசம், தெலுங்கானா, மேற்கு வங்காளம், குஜராத், அசாம் ஆகிய 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவிலும் கிருமித்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 571,459. இது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை விட 1.8 மடங்கு அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.