வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குத் திரும்புவோர் தங்களது சொந்த செலவில் 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
கொரோனா கிருமிப் பரவல் காரணமாக அனைத்துலக அளவில் விமானப் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டுவர மத்திய அரசு சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது.
ஆனால் இந்த விமானங்களுக்கு அமெரிக்கா தடை விதித்ததையடுத்து, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் தனிப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் விமானங்களை இயக்க மத்திய அரசு புதிய திட்டத்தை அறிவித்தது.
அதன்படி பிரான்சில் இருந்து கடந்த 18-ந்தேதி முதல் ஆகஸ்டு 1-ந்தேதி வரை 28 விமானங்கள் இந்திய நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. இதைப்போல அமெரிக்காவின் யுனைடெட் விமான நிறுவனம் 18 விமானங்களை வருகிற 31-ந்தேதி வரை இந்திய நகரங்களுக்கு இயக்குகிறது.
அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இருகட்டங்களாக உடல்நலப் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
அதன்படி அவர்கள் வந்திறங்கும் விமான நிலையங்கள், அவர்கள் தனிமைப்படுத்தப்படும் பகுதிகளில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
அவர்கள் முதலில் வந்திறங்கும் நகரத்திலேயே சொந்த செலவில் 7 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அவர்கள் உட்படுத்தப்படுவர். பின்னர் அவர்களது வீடுகளில் 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும்.