அப்பர் பாய லேபார் ரோட்டுக்கு அருகில் உள்ள தாய் செங் கார்டன்ஸ் தனியார் குடியிருப்புப் பகுதியில் தன்னுடைய பச்சிளம் குழந்தையைக் கைவிட்டுச் சென்றதாக நம்பப்படும் 29 வயது இந்தோனீசிய மாது கைது செய்யப்பட்டார்.
அங்கிருந்த குப்பைத் தொட்டி ஒன்றில் நேற்று முன்தினம் (ஜூலை 27) கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த ஆண் சிசு, கேகே மகளிர் மற்றும் சிறுவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
குழந்தையின் உடலில் காயங்கள் எதுவும் தென்படவில்லை; அது நல்ல நிலையில் இருப்பதாக போலிஸ் தெரிவித்தது.
அங் மோ கியோ போலிஸ் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டும், காணொளிப் பதிவுகளை ஆராய்ந்தும் அந்தப் பெண்ணின் அடையாளத்தை உறுதி செய்தனர்.
12 வயதுக்குட்பட்ட குழந்தையைக் கைவிட்டதற்காக குற்றவியல் தண்டனை சட்டப் பிரிவு 317ன் கீழ் அந்தப் பெண்ணின் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்தப் பெண்ணுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் ஆகியன விதிக்கப்படலாம்.