உலக அளவில் மூன்றில் ஒரு குழந்தையின் ரத்தத்தில் ‘லெட்’ எனப்படும் ஈயத்தின் அளவு அபாயகரமான அளவுக்கு அதிகமாக இருப்பதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.
ஐநா சபையின் யுனிசெஃப், சுற்றுச்சூழல் குழுமமான பியூர் எர்த் ஆகியவை மேற்கொண்ட இந்த ஆய்வில், மில்லியன் கணக்கான இளம் பிள்ளைகள் சரிப்படுத்த முடியாத மனநல, உடல்நலப் பிரச்சினைகளில் இருப்பது தெரியவந்துள்ளது.
சுமார் 800 மில்லியன் பிள்ளைகளின் ரத்தத்தில் டெசிலிட்டருக்கு, குறைந்தபட்சம் 5 மைக்ரோகிராம் அளவிலான ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் மூளை, நரம்புகள் மற்றும் இதயம், நுரையீரல் போன்ற முக்கிய உடலுறுப்புகளின் வளர்ச்சியைக் குறைக்கும் சாத்தியம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஈய - அமில மின்னூட்டிகளை சரிவர மறுசுழற்சி செய்யாதது, ஈயம் கலந்த சுவர் பூச்சுகள் உரிந்து வருவது, ஈயம் பூசப்பட்ட மின்னணுவியல் கழிவுகள், ஈயம் பூசப்பட்ட பாத்திரங்களால் உணவு கெட்டுப்போதல் உட்பட பல்வேறு தூய்மைக்கேட்டுக் காரணங்களால் இந்தப் பிரச்சினை ஏற்படுவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
வாகனங்கள், தொலைத்தொடர்புச் சாதனங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் மின்னூட்டிகள்தான் அதிக அளாவில் ஈயத்தைப் பயன்படுத்துகின்றன. ரத்தத்தில் ஈயம் சேர்வதற்கு இது முக்கிய காரணமாக அமைகிறது.
அத்தகைய மின்னூட்டிகளை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் மறுசுழற்சி செய்கின்றன. ஆனால், பொருளியல் ரீதியில் பின் தங்கிய நாடுகளில் அவற்றை மறுசுழற்சி செய்வதற்கான வசதிகள் பெரும்பாலும் இல்லை என்று கூறப்படுகிறது.
ரத்தத்தில் அதிக அளவு ஈயம் இருந்து, நெடுங்காலத்துக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தால் அது உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடும் என ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.