மறைமலை நகர்: ஏடிஎம் இயந்திரத்தில் அட்டையைப் போட்டால் பணம் வருவது போலவே, சென்னை அருகே மறைமலை நகரில் உள்ள ஏடிஎம்மில் அட்டையைப் போட்டால் சுத்தமான தண்ணீர் கொட்டுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை உற்பத்தி செய்யும் ‘ஆல்ஃபா லாவல் இந்தியா’ என்ற அனைத்துலக நிறுவனம் இந்த ஏடிஎம்மை நிறுவி உள்ளது.
இந்த ஏடிஎம்மில் அட்டையை செருகினால் 20 லிட்டர் கேன் தண்ணீர் கிடைக்கிறது. இதன் விலை 7 ரூபாய் மட்டுமே.
24 மணி நேரமும் பணம் எடுப்பதுபோல், இந்த ஏடிஎம்மிலும் 24 மணி நேரமும் தண்ணீர் வரும்.
“சென்னையின் புறநகர்ப் பகுதியில் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் குடியிருப்புவாசிகள் சிரமப்படுகின்றனர். அவர்களை மனதில் வைத்து இந்த ‘குடிநீர் ஏடிஎம்’ இயந்திரத்தை திறந்துள்ளோம்,’’ என ‘ஆல்ஃபா லாவல் இந்தியா’ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆவடியிலும் இது போன்ற ஏடிஎம் விரைவில் திறக்கப்பட உள்ளது.