சிங்கப்பூர் இன்று மேலும் 301 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களையும் சேர்த்து இங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 54,555ஆக உள்ளது.
சமூக அளவில் இன்று நால்வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களின் மூவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள். எஞ்சிய ஒருவர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர் என்று சுகாதார அமைச்சு இன்று பிற்பகல் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களாவர்.
இதற்கிடையே, கொரோனா கிருமித்தொற்று கண்டவர்கள் சென்ற இடங்களின் பட்டியலில் ஜூரோங் பாயிண்ட் கடைத்தொகுதியில் உள்ள பாப்புலர் புத்தகக் கடையும் சேர்க்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதார அமைச்சு நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில், கிருமித்தொற்று கண்ட குறைந்தது ஒருவராவது ஜூலை 26ஆம் தேதி நண்பகல் 12.05 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை அந்தப் புத்தகக் கடையில் இருந்ததாக குறிப்பிட்டது.
இந்நிலையில், சிங்கப்பூர் நேற்று 908 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏப்ரலுக்குப் பிறகு ஒரே நாளில் இத்தனை பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது இதுவே முதன்முறை. அவர்களில் 903 பேர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களாவர். இறுதியாக கிருமித்தொற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட குழுவைச் சேர்ந்த அவர்கள், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமானோர் வசிக்கும் விடுதிகளைச் சேர்ந்தவர்கள்.
அவர்களில் பெரும்பாலோருக்கு கிருமித்தொற்று அறிகுறிகள் இல்லாதபோதும் தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த காலத்தில் பரிசோதிக்கப்பட்டனர்.
நேற்று சமூக அளவில் ஒருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் 26 வயது பங்ளாதேஷ் ஊழியராவார். அவரிடம் கிருமித்தொற்றுக்கான அறிகுறி எதுவும் இல்லை. முந்தைய சம்பவங்களுடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாகவும் தெரியவில்லை. அவர் கிருமியைப் பரப்பும் நிலையில் தற்போது இல்லை என கூடுதல் பரிசோதனையில் தெரிய்வந்தது.
வெளிநாடுகளில் இருந்து வந்த நால்வருக்கு நேற்று இங்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் இந்தியாவிலிருந்து இங்கு ஜூலை 22ஆம் தேதி வந்தனர். அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவை நிறைவேற்றும் காலத்தில் அவர்கள் பரிசோதிக்கப்பட்டனர்.