கொவிட்-19 நோயாளிகள் உள்ளிட்ட தீவிர கண்காணிப்புத் தேவைப்படுவோருக்குச் சிகிச்சை அளிக்கும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களைப் பாதுகாக்க ஒரு மருத்துவமனை புதிய கவசங்களை உருவாக்கி இருக்கிறது.
பெட்டி வடிவிலான அந்தக் கவசங்கள், தீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வெவ்வேறு வகையான மூன்று கவசங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
அந்தக் கவசங்களை கழற்றி எடுத்து தீவிர கண்காணிப்புப் படுக்கையில் பொருத்தலாம். பல படுக்கைகளிலும் பயன்படுத்தலாம்.
இப்போதைய கவசங்கள் படுக்கையில் உள்ள நோயாளிகளை மூடியபடி அமைக்கப்படுகின்றன. புதிய கவசங்களை நோயாளிகள் படுக்கையில் இருந்து எழுந்து நேராக அமர்ந்து இருக்கும் நிலையிலும் பயன்படுத்த முடியும்.
இந்த மூன்று வகை கவசங்களை நீ ஆன் பலதுறை தொழில் கல்லூரியின் இயந்திர மனித ஆய்வு மற்றும் புத்தாக்க நிலையத்துடன் சேர்ந்து இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவக் குழு ஒன்று வடிவமைத்து இருக்கிறது.
வெவ்வேறு அளவில் இருக்கும் இந்தக் கவசங்களை வேறுபட்ட நிலைகளில் பயன்படுத்த முடியும். தீவிர கண்காணிப்புப் படுக்கைகளிலும் நோயாளிகளை இடமாற்றும்போதும் குழாய் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கும் போதும் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இடமாற்றக்கூடிய படுக்கையில் பொருத்தப்பட்டு இருக்கும் கவசங்களை கொவிட்-19 நோயாளிகளுக்கும் பயன்படுத்த முடியும்.
அத்தகைய நோயாளிகள் சக்கர நாற்காலியில் மருத்துவமனையின் பல்வேறு நிலையங்களுக்கு கொண்டு செல்லும்போது இவை பயன்படும்.
நோயாளிகளுக்கு இருமல் ஏற்படும்போது அவர்களிடம் இருந்து கிருமி பரவாமல் இருப்பதை கவசம் உறுதிப்படுத்தும்.