குடியரசின் நீரிணைகளைப் பாதுகாப்பை உறுதிசெய்திட புதிதாக ஆறு அதிநவீன சுற்றுக்காவல் கலன்கள் அறிமுகம் கண்டுள்ளன.
17 மீட்டர் அளவில் உள்ள இந்த ஆறாம் தலைமுறை கலன்களில், பல்வேறு உணர்திறன் கொண்டமைந்த நீர்மூழ்கி வெப்ப காமிரா, ரசாயண வாயுவைக் கண்டறியும் கருவி, ஆளில்லா வானூர்திகள் போன்ற அம்சங்கள் உள்ளதாக சிங்கப்பூர் கடற்துறை, துறைமுக ஆணையம் (எம்பிஏ) கூறியது.
போக்குவரத்து, வெளியுற அமைச்சுகளின் மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட், கலன்களை நேற்று அறிமுகப்படுத்தினார்.
எண்ணெய்க் கசிவிலிருந்து தேடி மீட்கும் பணிகள் வரை கையாளும் திறனை புதிய கலன்கள் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தேசிய தின அணிவகுப்பின் ஓர் அங்கமாக நேற்று நீரில் பவனி சென்ற கலன்களில் இந்தப் புதிய கலன்களும் இடம்பெற்றன.
இந்த அங்கத்தில் ‘எம்பிஏ’ பங்கேற்பது இதுவே முதல் முறை.
ஆணையத்தின் கலன்களுடன் கடலோரக் காவல் படை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, சிங்கப்பூர் குடியரசு கடற்படை ஆகியவற்றின் கலன்களும் இடம்பெற்றன.