நடிகர் சூர்யா குறித்து நிறைய புதுத்தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட ‘அருவா’ கைவிடப்பட்டதாக அண்மையில் ஒரு தகவல் வெளியானது. சூர்யா தரப்பில் இருந்து இதற்கு மறுப்பு தெரிவித்து எந்த விளக்கமும் வெளியாகவில்லை.
இதனால், ‘நல்ல தலைப்பு கைநழுவிப் போகிறதே’ என்று அவரது ரசிகர்கள் சமூக வலைத் தளங்களில் புலம்பத் துவங்கினர்.
போதாத குறைக்கு இயக்குநர் ஹரி அடுத்து தனது மைத்துனரான அருண் விஜய்யை வைத்து படம் இயக்கப்போவதாகவும் தகவல் வெளியானது.
இருவரும் இணைவது இதுவே முதன்முறை என்பதால், அருண் விஜய்க்கு ஏற்ப அதிரடி கதையை ஹரி உருவாக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே ஹரிக்கு பதிலாக ‘அருவா’ படத்தை பாண்டிராஜ் இயக்கப்போவதாக மற்றொரு தகவல் உலா வந்தது.
இதனால் ரசிகர்கள் பெரும் குழப்பத்துக்கு ஆளான நிலையில், ‘அருவா’ கைநழுவிப்போகவில்லை என்று தெரியவந்துள்ளது. கொரோனா ஊரடங்கு முடிவடைந்த பிறகு இப்படத்தின் பணிகள் மீண்டும் துவங்கும் என அதன் தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.
முன்பே அறிவித்த தேதிகளிலும் இடங்களிலும் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் மேலும் பல தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தயாரிப்புத் தரப்பு கூறியுள்ளது.
‘அருவா’ படத்தில் அண்ணன், தம்பி என சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க, ராஷி கண்ணா நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார். இன்னொரு நாயகியும் உள்ளாராம்.
“ஹரி இயக்கும் படத்தில் கண்ணை மூடிக்கொண்டு நடிக்கலாம். காரணம் கதைக்கேற்ப கதாநாயகர்களை தேர்வு செய்து வேலை வாங்குவார். அவர் மீதான நம்பிக்கையில்தான் ஆறாவது முறையாக அவருடன் இணைந்து பணியாற்றுகிறேன்,” என்கிறார் சூர்யா.
சமூக வலைத்தளங்களில் தம்மை விமர்சித்து கருத்து தெரிவிப்பவர்களுக்கு ரசிகர்கள் பதிலளிக்க வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன் மூலம் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
‘பிக்பாஸ்’ மீரா மிதுன் அண்மைய சில வாரங்களாக தமிழ் திரையுலகின் முன்னணி நாயகர்கள், நாயகிகள் குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக விஜய், சூர்யா குறித்த அவரது விமர்சனங்களால் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலவுகிறது. அவர்களும் மீராவை தாக்கும் வகையில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் பாரதிராஜாவும் தன் பங்குக்கு, சமூக வலைத்தளங்களில் அவதூறு பேச்சுகள் அதிகரித்துள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரசிகர்களை ஆசுவாசப்படுத்தும் விதமாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் சூர்யா.
“எனது தம்பி தங்கைகளின் நேரமும் சக்தியும் ஆக்கபூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குநர் பாரதிராஜாவுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்,” என சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடந்த 2018ஆம் ஆண்டு தாம் பதிவிட்ட சில கருத்துகளை நினைவுகூர்ந்துள்ளார்.
“தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துக்கொள்ள வேண்டாம்.
“உங்களின் நேரத்தையும் சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற,” என்று தாம் குறிப்பிட்டிருந்ததை இப்போது சுட்டிக்காட்டி மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் சூர்யா.
இதற்கிடையே ‘சூரரைப் போற்று’ படம் நேரடியாக இணையத்தளத்தில் வெளியாகும் என்று உலவும் தகவல் வெறும் வதந்தி என்று படக்குழுவினர் மீண்டும் விளக்கம் அளித்துள்ளனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இந்தி மறுபதிப்பு உரிமையைப் பெறுவது தொடர்பாக ‘பாலிவுட்’டில் இப்போதே கடும் போட்டி நிலவுவதாகத் தகவல்.