ஊழியர் தங்கும் விடுதிகளில் கிட்டத்தட்ட அறுவரில் ஒருவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பதாக சிங்கப்பூரின் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின் அடிப்படையில் செய்யப்பட்ட கணக்கெடுப்பு காட்டுகிறது.
ஆயினும் இந்த எண்ணிக்கை வெளிநாட்டு ஊழியர் சமூகத்தில் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பை உருவாக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
புதன்கிழமை நிலவரப்படி 323, 000 ஊழியர்களில் 52, 425 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கிறது.
பெரும்பாலான நாடுகளில், கண்டுபிடிக்கப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை, அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களில் சேர்க்கப்பட்டால் அந்தந்த நாடுகளின் மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கை ஐந்து முதல் பத்து மடங்கு வரை அதிகமாக இருக்கும் என்று தேசிய சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் சாவ் சுவீ பொதுச்சுகாதாரப் பள்ளியின் ஆய்வுப்பிரிவுக்கான துணைத் தலைவர் இணைப் பேராசிரியர் அலெக்ஸ் குக் தெரிவித்தார்.
கிருமியைத் தொற்றியிருந்து ஒருவர் குணமடைந்த பின்னர் அவர் நோயாளி அல்ல என அதிகாரபூர்வ குறிப்புகளில் பதிவிடப்படலாம். அல்லது, ஏற்கெனவே சோதிக்கப்பட்டு கிருமித்தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவருக்குப் பிற்காலத்தில் இந்நோய் தொற்றலாம். இவ்வாறு, அதிகாரபூர்வ குறிப்புகளில் இல்லாத சம்பவங்கள் ‘மறைவான’ கிருமித்தொற்றுச்சம்பவங்கள் என அழைக்கப்படுகிறது.
ஆயினும், ஊழியர் தங்கும் விடுதிகளில் கிருமித்தொற்றை மருத்துவமனைகளும் அமைச்சர்நிலை பணிக்குழுவும் அணுக்கமாகக் கண்காணிக்கின்றன. அத்துடன் ஒவ்வோர் ஊழியரும் சோதிக்கப்படுகின்றனர். எனவே இத்தகைய மறைவான கிருமித்தொற்றுகளின் எண்ணிக்கை வெளிநாட்டு ஊழியர் சமூகத்தில், பொது மக்கள் இடையிலான கிருமித்தொற்று எண்ணிக்கையைக் காட்டிலும் குறைவாக இருக்கும் என்று பேராசிரியர் குக் கூறினார்.