வெள்ளத்தில் சிக்கிய இளையர் ஒருவர் வழியில் ஒரு மரத்தைப் பற்றிக் கொண்டு 12 மணி நேரம் போராடிய நிலையில், ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளார்.
சட்டீஸ்கர் மாநிலம் விலாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜிஜேந்திர காஷ்யப் என்ற அந்த இளையர் கடந்த சனிக்கிழமை அன்று அங்குள்ள குடாகாட் அணைப் பகுதி அருகே இருந்துள்ளார்.
இந்நிலையில் அந்த அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டது. தண்ணீர் வரும் பாதையில் நின்றிருந்த ஜிஜேந்திர காஷ்யப்பை வெள்ளம் அடித்துச் சென்றது.
எனினும் அதிர்ஷ்டவசமாக வெள்ளம் இழுத்துச்சென்ற பாதையில் சிறிய பாறையையும் அதன் அருகே உள்ள மரத்தையும் அவர் பார்த்துள்ளார். பின்னர் எப்படியோ அந்த மரத்தைப் பற்றிக் கொண்டார்.
ஞாயிற்றுக்கிழமை ஜிஜேந்திர காஷ்யப்பின் நிலையைக் கண்ட சிலர் மீட்புப் படையினருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
பின்னர் சிகிச்சைக்காக உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளையர் மீட்கப்படும் காட்சி தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் பலரால் பகிரப்பட்டன.