தென்கொரியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,000ஐ கடந்துள்ளது. அதுமட்டுமல்லாது, கிருமித்தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 11 மடங்கு அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் நள்ளிரவு நிலவரப்படி மேலும் 235 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதாக தென்கொரியாவின் நோய் தடுப்பு மையம் தெரிவித்தது.
பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் சமூக அளவில் பாதிக்கப்பட்டனர். வெளிநாட்டிலிருந்து தென்கொரியா சென்ற 13 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.
கொரோனா கிருமித்தொற்று காரணமாக தென்கொரியாவில் இதுவரை 324 பேர் உயிரிழந்துவிட்டனர். கடந்த மாதம் 27ஆம் தேதியன்று தென்கொரியாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் 441ஆகப் பதிவானது. அதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் கடந்த மாதத் தொடக்கத்தில் இருந்த நிலையைவிட தற்போது மோசமாக இருப்பதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த மாதத் தொடக்கத்தில் அன்றாடம் 50க்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே கிருமித்தொற்று ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களில் கிருமித்தொற்றால் மிக மோசமான நிலையில் இருப்போர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 18ஆம் தேதி 18 பேரின் உடல்நிலை மோசமாக இருந்தது, இந்த எண்ணிக்கை நேற்று முன்தினம் நிலவரப்படி 104ஆக அதிகரித்தது. அண்மையில் பாதிக்கப்பட்டோரில் 30 விழுக்காட்டினர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கான தட்டுப்பாடு நிலவக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது.
மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் 43 கொவிட்-19 நோயாளிகளுக்கு மட்டுமே மருத்துவமனைகளில் இடம் உள்ளது.
இம்மாதத் தொடக்கத்தில் மேலும் 130 கொவிட்-19 நோயாளிகளின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கும் என்று சுகாதார அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
இம்மாதம் 14ஆம் தேதிக்குள் மருத்துவமனைகளில் கூடுதலாக 40 படுக்கைகளைச் சேர்க்க தென்கொரிய பேரிடர் நிர்வாகத் தலைமையகம் திட்டமிட்டுள்ளது. மோசமாகப் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவமனைகளில் இடம் கிடைக்க இலேசாகப் பாதிக்கப்பட்டோரை மற்ற வார்டுகளுக்கு அனுப்ப அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.