கத்தி, கம்புகளுடன் சீன வீரர்கள்; இந்தியா மீண்டும் கடும் எச்சரிக்கை
புதுடெல்லி: இந்தியா சீனா இடையேயான எல்லைப் பிரச்சினை மோசமடைந்துள்ள நிலையில் இருதரப்புக்கும் இடையே நிலவும் பதற்றத்தைக் குறைக்க ரஷ்யா முயற்சி மேற்கொண்டுள்ளது.
லடாக் பகுதியில் சீனா அத்துமீறி வருவதாக இந்தியா குற்றம் சாட்டி உள்ளது. பதிலுக்கு சீனாவும், ஒப்பந்தங்களை மீறி இந்தியா செயல்படுவதாக சாடுகிறது.
இந்நிலையில் சீனா, இந்தியா என இரண்டு நாடுகளுடனும் நட்புறவு பாராட்டி வரும் ரஷ்யா இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த முயன்று வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சீன, இந்திய வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்துப் பேசிய பிறகு ரஷ்ய தரப்பிலிருந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் தரப்போவதில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. எல்லையில் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில் ரஷ்யாவின் தலையீடு மிக முக்கியத் திருப்பமாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.
ஏற்கெனவே எல்லைப் பிரச்சினையில் இந்தியாவுக்கு உதவத் தயார் என்று அமெரிக்கா தெரிவித்திருந்தது. ஆனால் நடப்புச் சூழலில் ரஷ்யாவின் உதவியைப் பயன்படுத்திக் கொள்வதே இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என இந்தியத் தரப்பு கருதுவதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே சீன ராணுவம் எல்லையில் படைகளைக் குவித்துள்ளது. சீன வீரர்கள் துப்பாக்கிகளைத் தோளின் பின்பக்கம் தொங்கவிட்டு, கையில் கத்தி, கம்புகளை வைத்துள்ளது போன்ற படம் வெளியாகியுள்ளது.
அண்மையில் பாங்கோங் ஏரியின் தெற்குக் கரைப் பகுதியில் இந்தியா தனது நிலைகளை வலுப்படுத்தி உள்ளது. மேலும் சீன ராணுவம் அத்துமீறி நுழைய மேற்கொண்ட நடவடிக்கைகளையும் இந்திய வீரர்கள் முறியடித்துள்ளனர். இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள சீனத் தரப்பு தமது வீரர்களைக் குவித்துள்ளது.
இதற்கிடையே ஜம்முவில் உள்ள குல்காம் மாவட்டத்தில் காவல்துறையும் ராணுவமும் இணைந்து மேற்கொண்ட வாகனச் சோதனையின்போது சீனத் துப்பாக்கிகளுடன் இருவர் கைதாகினர்.
ஒரு லாரியை மடக்கிச் சோதனையிட்டபோது ஒரு ஏகே 47 ரக துப்பாக்கி, 6 சீனத் துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றைப் பறிமுதல் செய்த பாதுகாப்புப் படையினர் லாரியில் வந்த இருவரை கைது செய்தனர்.